242
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த
5வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.

(பி - ம்.) 3 ‘ பாணன் கொள்ளான்’

திணையும் துறையும் அவை.

1 ஒல்லையூர் கிழான்மகன்பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார்

(பி -ம்.) குடவாயினல்லாதனார்) பாடியது.

(இ - ள்.) இளைய வீரர் சூடார்; 2வளையணிந்த இளையமகளிர் பறியார்; நல்லயாழ்க்கோட்டின் மெல்லவளைத்துப் பாணன் பறித்துச்சூடிக்கொள்ளான்; பாடினி (பி - ம். பாணிச்சி) சூடாள்;தன்னுடைய ஆண்மைப்பாடு யாவர்க்கும் வெளிப்படவீரரை எதிர்நின்று கொன்று வென்ற வலிய வேலையுடையசாத்தன் இறந்துபட்டபின்பு முல்லையாய நீயும் பூக்கக்கடவையோ,அவனது ஒல்லையூர் நாட்டின்கண்?- எ - று.

அவனையிழந்து கொடியேனாய்வாழ்கின்ற யானேயன்றி நீயும் கொடியையாய்ப் பூக்கின்றாயோவெனஎச்சவும்மையாய் நின்றது; என்றது, பூச்சூடி நுகர்வாரின்மையிற்பயனில்லையென்றதாம்.


(கு - ரை.) 1. புறநா. 64: 2.

4. ஆண்மை, ஆளுந்தன்மையெனப்பொருளுரைத்துஇவ்வடியை மேற்கோள் காட்டினர் நச்சினார்க்கினியர்;தொல். கிளவி. சூ. 57.

(242)

1 ஒல்லையூர்: இது கோனாட்டிலுள்ளஒலியமங்கலமென்னும் ஊர்.

2 ‘சில்வளை விறலியென்றது, பல்வளையிடுவது பெதும்பைப் பருவத் தாகலின், அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக்குரியளாதல் கூறப்பட்டது’ (பதிற். 57 : 6, உரை).