20
இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத் தகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும், என்றாங்
5கவையளந் தறியினு மளத்தற் கரியை
அறிவு மீரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்குந் தீயோடு
செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது
பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே
10திருவி லல்லது கொலைவில் லறியார்
நாஞ்சி லல்லது படையு மறியார்
திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப்
பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு
வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
15பகைவ ருண்ணா வருமண் ணினையே
அம்புதுஞ்சுங் கடியரணால்
அறந்துஞ்சுஞ் செங்கோலையே
புதுப்புள் வரினும் புழம்புட் போகினும்
விதுப்புற வறியா வேமக் காப்பினை
20அனையை யாகன் மாறே
மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே.

திணையும் துறையும் அவை.

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையைக் குறுங்கோழியூர்கிழார் பாடியது.

(இ - ள்.) பெரிய கடலினது ஆழமும், அகன்ற உலகத்துப் பரப்பும், காற்றியங்கும் திசையும், வடிவின்றி நிலைபெற்ற ஆகாயமும் என்று சொல்லப்படும் அவற்றை வரையறுத்தறியினும் வரையறுத்தற்கு அரியை, அறிவும் அன்பும் மிக்க கண்ணோட்டமும்; ஆகலால். சோற்றை ஆக்கும் நெருப்புடனே செஞ்ஞாயிற்றினது வெம்மையல்லது வேறு வெம்மையறியார், நின்குடை நிழற்கண் வாழ்வோர்; இந்திரவில் அல்லது பகைவரது கொலைவில்லை அறியார்; கலப்பை அல்லது வேறுபடைக்கலமும் அறியார்; போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரருடனே பகைவர் மாய அம்மாற்றாருடைய 1மண்ணைக்கொண்டு உண்ணுந் தலைவ! நின்னுடைய நாட்டின்கண் வேட்கைநோயுற்ற பெண்டிர் விரும்பி உண்ணினல்லது பகைவர் உண்ணப்படாத பெறுதற்கரிய மண்ணையுடையை; அம்பு தங்குங் காவலையுடைய அரணுடனே அறம் தங்கும் செவ்விய கோலையுடையை; புதுப்புள் வரினும் பழைய புள் அவ்விடத்தை விட்டுப் போகினும் அவற்றால் நடுக்கமுறுதல் அறியாத சேமமாகிய காவலை யுடையை; அத்தன்மையை யுடையை யாதலான், உலகத்து நிலைபெற்ற உயிரெல்லாம், தத்தம் காதலால் நினக்கு ஏதம் வருங்கொலென்று அஞ்சும் - எ - று.

அறிவும் ஈரமும் கண்ணோட்டமுமென்பன சினைவினைப்பாற்பட்டு அளத்தற்கரியை யென்னும் முதல்வினை கொண்டன.


(கு - ரை.) 1. புறநா. 26 : 1; “கடற்குட்டம் போழ்வர் கலவர்” (நான்மணிக். 18)

1-5. புறநா. 30 : 1 - 6; நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின், அளப்பரி யையே” (பதிற். 14)
10. திருவில்-இந்திரவில்; “தேர்செல வழுங்கத் திருவிற் கோலி, ஆர்கலி யெழிலி சோர்தொடங் கின்றே” (ஐங்குறு. 428); “திருவில்வீழ்ந், தொருக்குலாய் நிலமிசை மிளிர்வ” (சீவக. 1903); “திருவிலிட்டுத் திகழ்தரு மேனியன்” (சிலப். 15 : 156; மணி. 6 : 10); “நாமவே னரபதி யுலகங் காத்த நாட், காமவேள் கவர்கணை கலந்த தல்லது, தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை, நாமநீர் வரைப்பக நலிவ தில்லையே” (சூளா. நகர. 18)

13. “பொருவார், மண்ணெடுத் துண்ணு மண்ணல் யானை, வண்டேர்த் தொண்டையர்” (குறுந். 260)

14. வயவு - வயா; கருப்பமுற்ற மகளிர்க்கு நுகரப்படும் பொருள் மேற்செல்லும் வேட்கை; அதனால் அவர்கள் புகையுண்டமண்ணையுண்பர்; “மனைபுகை யுண்ட கருமண் ணிடந்து, பவள வாயிற் சுவை காணாது” (கல்லாடம். 7); “வயாநோ யெய்தி மண்ணினை நுகர்தல் தேன்சோர், முருகவிழ் துளவத் தண்டார் முகுந்தனை மல்ல லோங்கு, திருமகள் சேருமுன்னஞ் சேர்ந்திட வேண்டு மென்ன, இருநில மங்கை முன்போ யெய்துதல் போன்ற தன்றே” (கூர்ம. கண்ணனவதரித்த. 21); “பொருதடந்தோண் மகன்பழகப் புகையுண்ட கருமண்ணும்......உவந்தருந்தும் வயாநிறைந்த” (திருவானைக்கா. கோச்செங்கணார். 171) ‘வயா’ என்னுஞ் சொல், ‘வயவு’ எனத் திரிந்துநின்று வேட்கைப் பெருக்கமாகிய குறிப்பை யுணர்த்துதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 75, சே.; சூ. 73, .

18. “புதுப்புள் வருதலும் பழம்புள்போதலும் பொழுதன்றிக் கூகை குழறலும் போல்வன புள்ளின்கட்டோன்றிய நிமித்தம்” (தொல். புறத்திணை. சூ. 36, .)

19. ‘விதிர்ப்பு’ என்பது நடுக்கமாகிய குறிப்புணர்த்துமென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 20, சே.; சூ. 18, .; இ. வி. சூ. 281, உரை.

18-9. மணி. 12 : 94.

20. புறநா. 4 : 17

21. சீவக. 957, ந. மேற்.

18-21. புட்களைப்பற்றி வந்ததற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 30, இளம்.

மு. “குடியோம்புதல் வருமாறு:- ‘இருமுந்நீர்.....அஞ்சும்மே’ என வரும்” (தொல். புறத்திணை. சூ. 16, இளம்.); புள்நிமித்தத்தால் பாடாண்டலைவற்குத் தோன்றிய தீங்குகண்டு அஞ்சி ஓம்படை கூறியதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 36, . (20)


1 இப்பொருள்பற்றியே வடமொழியிலும் ‘பூபுக்’ என்று அரசனைக் கூறுவர்,