216
கேட்டன் மாத்திரை யல்ல தியாவதும்
காண்ட லில்லா தியாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமைய ராகினும்
அரிதே தோன்ற லதற்பட வொழுகலென்
5றையங் கொள்ளன்மி னாரறி வாளீர்
இகழ்வில னினிய னியாத்த நண்பினன்
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர்
பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த
10காதற் கிழமையு முடைய னதன்றலை
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவ னொழிக்கவவற் கிடமே.

(பி - ம்.) 2 ‘காண்டலீயாது’

திணையும் துறையும் அவை.

அவன் வடக்கிருந்தான் பிசிராந்தையார்க்கு இடனொழிக்க வென்றது.

(இ - ள்.) ‘நின்னை அவன் கேட்டிருக்கும் அளவல்லது சிறிது பொழுதும் காண்டல்கூடாது பல்யாண்டுசெல்லத் தவறின்றாக மருவிப்போந்த உரிமையையுடையோராயினும் அரிதே தலைவ! அவ்வழுவாத கூற்றிலே படவொழுகுதல்’ என்று கருதி ஐயப்படாதொழிமின்; நிறைந்த அறிவினையுடையீர்! அவன் என்னை என்றும் இகழ்ச்சியிலனாய் இனிய குணங்களையுடையன்; பிணித்த நட்பினையுடையன்; புகழ் அழியவரூஉம் பொய்ம்மையை விரும்பான்; தனது பெயரை பிறர்க்குச் சொல்லும்பொழுது என்னுடைய பெயர் பேதைமையையுடைய சோழனென்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும் மிக்க அன்புபட்ட உரிமையையுமுடையன்; அதற்கு மேலே இப்படி யான் துயரமுறுங்காலத்து ஆண்டு நில்லான்; இப்பொழுதே வருவன்; அவனுக்கு இடம் ஒழிக்க-எ - று.

‘அதற்பட’ என்பதற்கு அவ்விறந்துபாட்டிலே படவென்றும், ‘இகழ்விலன்’ என்பதற்கு இகழப்படுவன குணமிலனென்றும் உரைப்பினும் அமையும்.

பேதைச்சோழனென்றது, தான் தன்னை இழித்துக்கூறியது.


(கு - ரை.) 1-5. “புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான், நட்பாங் கிழமை தரும்” (குறள், 785)

6. “யாத்தன்று நட்பே” (குறுந். 313 : 4)

7. “பொய்யாமை யன்ன புகழில்லை” (குறள், 296)

(216)