308
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம்
5வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே
வேந்துடன் றெறிந்த வேலே யென்னை
சாந்தா ரகல முளங்கழிந் தன்றே
உளங்கழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிறல்
ஓச்சினன் றுரந்த காலை மற்றவன்
10புன்றலை மடப்பிடி நாணக்
குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே.

(பி - ம்.) 6 ‘வேலேயன்னை’ 8 -10 ‘பெருவ...வாபுன்றலைமடப்பிடி’ 9 ‘மற்றவர்’

திணை - வாகை; துறை - மூதின்முல்லை.

கோவூர்கிழார்.


(கு - ரை.) 1 - 2. “பொன்வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின், இன் குரற் சீறியாழ்”(சிறுபாண். 34 - 5); “பொன்வார்ந் தன்ன புரியடங்குநரம்பிற், றொடையமை கேள்வி” (பெரும்பாண். 15 -6); “பொன்வார்ந் தனயாழி னரம்புளர்ந்து” (பாகவதம்,10. கோவத்தன. 39); கலித். 33 : 23.

1 - 3. பொற்கம்பியினை ஒத்த முறுக்குஅடங்கின நரம்பினையும், மின்னலை ஒத்ததோலினையும் மிஞிறென்னும் வண்டுச்சாதியின் குரல்போன்ற ஓசையையுமுடைய சிறிய யாழ்க்கல்வியின் நன்மைநிறைந்த விருப்பம் வந்த பாண!

4. சீறூர் மன்னன் - குறுநிலமன்னன்.எஃகம் - வேல்; எழுவாய்.

5. வேந்தன் ஊருகின்ற. ஏந்துமுகம் -எடுத்தமுகம்.

4 - 5. எஃகம் முகத்தது: “வேந்தூர்யானைக் கல்ல, தேந்துவன் போலான்ற னிலங்கிலைவேலே” (புறநா. 301 : 15 - 6)

6 - 7. அரசன் கோபித்தெறிந்த வேல்என் தலைவனது சந்தனம் பூசிய மார்பினுள்ளே சென்றது;புறநா. 63 : 9.

8 - 9. நம் பெருவிறல், தன்மார்பின் உட்சென்ற அவ்வொளி பொருந்திய வேற்படையைப்பறித்து எடுத்துச் செலுத்தி ஓட்டிய காலத்து; பெருவிறல்- மிக்க வலியை யுடையவன்.

9 - 11. பிடி - பெண்யானை; அது வேந்தனூர்தி.அவ்விடத்துப் புல்லிய தலையையுடைய பிடி நாணக் களிறுகளெல்லாம்புறங்கொடுத்து ஓடின.

மு. ஆரமரோட்டலென்னுந் துறைக்குமேற்கோள் காட்டி, ‘இது சீறூர் மன்னன் வேந்தனைப்புறங் கண்டது’ என்பர்; தொல். புறத்திணை. சூ. 5,ந.

(308)