31
சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல
இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை
உருகெழு மதியி னிவந்துசேண் விளங்க
5நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசறை யல்லது நீயொல் லாயே
நுதிமுக மழுங்க மண்டி யொன்னார்
கடிமதில் பாயுநின் களிறடங் கலவே
போரெனிற் புகலும் புனைகழன் மறவர்
10காடிடைக் கிடந்த நாடுநனி சேய
செல்வே மல்லே மென்னார் கல்லென்
விழவுடை யாங்கண் வேற்றுபுலத் திறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
15வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப
வலமுறை வருதலு முண்டென் றலமந்து
நெஞ்சுநடுங் கவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே.

(பி - ம்.) 16 ‘நெஞ்ச நடுங்கி யவலம்’, ‘நடுங்கவவலம்’

திணை - வாகை; துறை - அரசவாகை; மழபுலவஞ்சியுமாம்.

அவனைக் கோவூர்கிழார் பாடியது.

(இ - ள்.) சிறப்புடை முறைமையாற் பொருளும் இன்பமும் அறத்தின்பின்னே தோன்றும் காட்சிபோலச் சேரபாண்டியருடைய இரண்டு குடையும் பின்னாக ஓங்கிய நினது ஒன்றாகிய வெண்கொற்றக்குடை நிறம் பொருந்திய கலைநிறைந்த திங்கள்போல ஓங்கிச் சேய்மைக்கண்ணே விளங்க நல்ல புகழ்வேட்கையை விரும்பி வெல்லும்போரினைச்செய்யும் வீட்டின்கண்ணே யிருத்தலல்லது நின்நகரின்கண் இருத்தலை உடம்படாய் நீ; கோட்டினது நுனைமுகம் தேய மடுத்துப் பகைவரது காவலையுடைய மதிலைக் குத்தும் நின்னுடைய யானைகள் அடங்கா; பூசலென்று கேட்பின் விரும்பும் அணிந்த வீரக்கழலையுடைய மறவர், காடு நடுவே கிடந்த நாடு மிகவும் தூரியவாதலால், யாம் போவேமல்லேமென்று கருதார்; ஆதலான், ஓசை உண்டான விழாவினையுடைய அவ்விடத்துப் பகைப்புலத்தின்கண்ணே தங்கிவிட்டுக் கீழ்க்கடல் பின்னதாக மேற்கடலினது வெளிய தலையையுடைய திரை நினது குதிரையினது குளம்பையலைப்ப வலமாக முறையே வருதலுமுண்டாமென்று சுழன்று நெஞ்சம் நடுங்கும் அவலம் பரப்பத் துயிலாத கண்ணையுடையவாயின, வடநாட்டுள்ள அரசுகள்--எ - று.

அவம் பாயவென்பதூஉமாம்.


(கு - ரை.) 1-2. குறள். 4-ஆம் அதிகாரத்தின் அவதாரிகையில் இவ்வடிகள் மேற்கோளாகப் பரிமேலழகராற்காட்டப்பட்டுள்ளன.

3. வென்ற அரசர்களின் குடைக்குப் பின் தோற்ற அரசர்களுடைய குடைகளைப் பிடிப்பித்தல் மரபு. இருகுடை என்றதற்குச் சேர பாண்டியர்களுடைய குடைகள் என்று பொருள் எழுதியதனால், இவ்வரசன் அவர்களை வென்று அடக்கியவன் என்பது தெளிவாகின்றது; வருஞ்செய்யுளில் வந்துள்ள, ‘பூவாவஞ்சியுந்தருகுவன்’, ‘மாட மதுரையுந் தருகுவன்’ என்பனவும் இதனை வலியுறுத்தும்.

3-4. கலித். 100 : 3-4.

1-4. “குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று, நின்றுயர் வாயிற் புறநிலைப்ப - ஒன்றார், விளங்குருவப் பல்குடைகள் வெண்மீன்போற் றோன்றித், துளங்கினவே தோற்றந் தொலைந்து” (பெரும்பொருள்விளக்கம்)

5. வேட்டம் - விரும்புதல்; புறநா.214 : 6.

5-6. “வென்றே புகழ்புனை வேலண்ண லேயிந்த வெற்பினுள்ள, தன்றே யெனினு மரிவையை யானடி வீழ்ந்திறைஞ்சி, இன்றே திருத்தியிருந்தழை வாங்குவ னிற்றைக்குநீ, சென்றே வருக சிறுகான் முடியுநின் சிந்தனையே” (அம்பிகாபதி.117)

9. வீரர்கள் போரின்கண் மிக்க விருப்பமுடையவரென்பது, புறநா.68 : 11 - 3, 89 : 7 - 9 என்பவற்றாலும், “மண்டமர் நசையொடு கண்படை பெறாஅது” (முல்லை.67), “செருவேட்டுச் சிலைக்குஞ் செங்கணாடவர்” (அகநா.157 : 4), “உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன், செறினுஞ்சீர் குன்ற லிலர்” (குறள்,778) என்பவற்றாலும், ‘போர்பெற்றறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லாரென்பதாம்; பிறரும், “போரெனிற் புகலும் புனைகழன் மறவர் என்றும்....கூறினார்” என்னும் பரிமேலழகருரையாலும் விளங்கும்.

14. புறநா.2 : 10, குறிப்புரை.

15. “வங்க மறிகடல் சூழெழு பார்வலம் வந்த மனுகுல சோழனை” (வி. பா.17-ஆம் போர். 66)

17. “பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே” (குறுந்.292 : 8.) உயர்திணை அஃறிணையாகக் கூறப்பெற்ற வழுவமைதிக்கு மேற்கோள்; நன். வி.சூ. 410.

16-7. ‘நெஞ்சுநடுங் கவலம்.....அரசே : அஃது அரசியற் றன்மையை யுணர்த்தற்பாலது அத்தன்மையையுடைய மக்களை யுணர்த்தி உயர்திணையாய் ஈண்டு அஃறிணையான் முடிதலின் வழுவாயிற்று; இவ்வாறு வருவனவும் பிறவும் அமைத்துக்கொள்க,’ (நன்.சூ. 409, மயிலை.)

மு. வஞ்சித்திணைக்குரிய இயங்குபடையரவமென்னும் துறைக்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 7, இளம்.;சூ. 8, ந.

இச்செய்யுள் தலைவனது வெற்றியைக் கூறலின் அரசவாகையும், அவன் பகைவர் நாட்டை அழித்தமை கூறலின் மழபுல வஞ்சியுமாயிற்று.

(31)