382
கடற்படை யடற்கொண்டி
மண்டுற்ற மலிர்நோன்றாட்
டண்சோழ நாட்டுப் பொருநன்
அலங்குளை யணியிவுளி
5நலங்கிள்ளி நசைப்பொருநரேம்
பிறர்ப்பாடிப் பெறல்வேண்டேம்
அவற்பாடுது மவன்றாள் வாழியவென
நெய்குய்ய வூனவின்ற
பலசோற்றா னின்சுவைய
10நல்குரவின் பசித்துன்பினின்
முன்னாள் விட்ட மூதறி சிறாஅரும்
யானும், ஏழ்மணியங் கேழணியுத்திக்
கட்கேள்விக் கவைநாவின்
நிறனுற்ற வராஅப்போலும்
15வறனொரீஇ வழங்குவாய்ப்ப
விடுமதி யத்தை கடுமான் றோன்றல்
நினதே, முந்நீ ருடுத்தவிவ் வியனுல கறிய
எனதே, கிடைக்கா ழன்ன தெண்கண் மாக்கிணை
கண்ணகத் தியாத்த நுண்ணரிச் சிறுகோல்
20எறிதொறு நுடங்கி யாங்குநின் பகைஞர்
கேட்டொறு நடுங்க வேத்துவென்
வென்ற தேர்பிறர் வேத்தவை யானே.

(பி - ம்.) 2 ‘மணடறற மறனொனறாட’, ‘மண்டறற மலிறநொன’

3 ‘பொருநன வலஙகுளை’ 6 ‘வேணடேமயறபாடுதும்’ 9 ‘னினஞ சுவையநல் குரவின பசித்துன்பவென்பநின்’ 12 ‘ யானுமெமணி’ 13 ‘நாவிறறூநிறத்தவராஅப்’, ‘நாவிறறூ நிறத்தவாஅப்’ 15‘வயங்குவாயபப’, ‘வமஙகுவாயபப’ 17 ‘விலவயினுலகு’ 18 ‘கிடைகாழனன வென்றெண்கண்’ 21 ‘வெநது’, ‘வோதுவென்’

திணை - அது; துறை - கடைநிலை

சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார்.


(கு - ரை.) 1. கொண்டி - பொருளின்மிகுதி ; "கொண்டி பெறுகென் றோனே" (புறநா.390 : 23)

2. மலிர் - நீரூற்று; "மணலாடு மலிர்நிறை" (ஐங்குறு. 15)

3. பொருநன் - உவமிக்கப்படுபவன்; "போர்மிகு பொருந" (முருகு. 276) ; "வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந" (மதுரைக். 42) ; அரசனுமாம்.

5. பொருநரேம் - பொருநராக உள்ளேம். 6. பிறரைப் பாடி.

7. வாழியவென அவனைப்பாடுவேம். 9. சோற்றான் - சோற்றோடு.

12. ஏழ்மணி - எழுச்சியையுடைய மணி. உத்தி - படப்பொறி.

13. கட்கேள்வி - கண்ணாற்கேட்டல். கவைநா - பிளவுப்பட்ட நாக்கு.

15. வறன் - வறுமை. வழங்கு வாய்ப்ப - பிறர்க்கு யாம் கொடுத்தல் கைகூடும்படி.

14 - 5. வறுமைக்கு அராவின் விடம் உவமம்.

16. மதியும் அத்தையும் அசைநிலைகள். தோன்றல் : விளி.

17. நினதாகிய உலகு அறிய.

18. கிடைக்காழ் - நெட்டியின் காம்பு. எனதாகிய கிணையென்க.

18 - 9. கிணையினிடத்து அதனையடிக்கும் சிறுகோல் கட்டப்பட்டிருக்கும் ; "நுண்கோற் சிறுகிணை" (புறநா. 383 : 3)

21. கேட்டொறும் - கேட்குந்தோறும்.

18 - 21. ஒப்பு. நற்.100 : 10 - 12.

22. வென்ற தேர் - ஏனையோரை வென்ற தேரையுடைய. பிறர் - அயலரசர். வேத்தவையான் - இராசசபைக்கண்.
அறிய (17) ஏத்துவென் (21)

(382)