44
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி
நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்
5தலமரல் யானை யுருமென முழங்கவும்
பாலில் குழவி யலறவு மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில்
வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும்
இன்னா தம்ம வீங்கினி திருத்தல்
10துன்னருந் துப்பின் வயமான் றோன்றல்
அறவை யாயி னினதெனத் திறத்தல்
மறவை யாயிற் போரொடு திறத்தல்
அறவையு மறவையு மல்லை யாகத்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
15நீண்மதி லொருசிறை யொடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.

(பி - ம்.) 2 ‘நெய்மிகுதி’ 3 ‘வெற்றி’ 5 ‘துலமரல்’ 9 ‘வீண்டினி திருத்தல்’ 11 ‘யாயினிற்றெனத் திறவைதன்’ 13 ‘யாகித்’ 16 ‘வுடைத்தது’

திணையும் துறையும் அவை.

அவன் ஆவூர்முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது.

(இ - ள்.) கரிய பிடியினது ஈட்டத்தோடு பெரிய கயத்தின்கட் படியாவாய் நெல்லையுடைய கவளத்துடனே நெய்யால் மிதித்துத் திரட் டப்பட்ட கவளமும் பெறாவாய்த் திருந்திய மருங்கையுடைய வலிய கம்பம் வருந்தச் சாய்த்து நிலத்தின்மேலே புரளும் கையையுடையவாய் வெய்தாக உயிர்த்துச் சுழலும் யானை உருமேறுபோல முழங்கவும், பாலில்லாத குழவி அழவும், மகளிர் பூவில்லாத வறிய தலையை முடிப்பவும், நீரில்லாத தொழில்புனைந்த நல்ல மனையிடத்துள்ளார் வருந்திக் கூப்பிடும் கூப்பீட்டைக் கேட்கவும், இவற்றிற்கு நாணாது இவ்விடத்து நீ இனிதாக இருத்தல் இன்னாது; நண்ணுதற்கு அரிய வலியையுடைய வலிய குதிரையையுடைய தோன்றால்! அறத்தை உடையையாயின், இது நினதன்றோ என்று சொல்லித் திறத்தல் செய்வாயாக; மறத்தையுடையையாயின், போரால் திறத்தல் செய்வாயாக; அவ்வாறன்றி, அறத்தையும் மறத்தையுமுடையையல்லையாகத் திறவாது அடைக்கப்பட்ட திண்ணிய நிலையை உடைத்தாகிய கதவினையுடைய நீண்ட மதிலுள் ஒரு பக்கத்தே ஒதுங்குதல் நாணுந் தன்மையையுடைத்து, இஃது ஆராயுங்காலத்து-எ - று.

செய்யென ஒருசொல் வருவித்து உரைக்கப்பட்டது.

திறத்தலென்பதனை இது திறக்கவென வியங்கோளீறாக உரைப்பினும் அமையும்.

1அம்ம (9) கேட்பித்தற்கண் வந்தது.

‘அறவியு மறவியு மல்லை யாயின்’ என்று பாடமோதுவாரும் உளர்.

படியா, பெறா என்பன எதிர்மறைவினையெச்சமுற்று.

கையவென்பது, வினையெச்ச வினைக்குறிப்புமுற்று.


(கு - ரை.) 2. நெற்கவளம் : புறநா. 184 : 1, 337 : 14; “காய்நெற் கற்றையின், பிடிநலந் தழீஇவரும் பெருங்கைக் குஞ்சரம்” (சீவக. 81). நெய்ம் மிதி : ‘நெய்ம்மிதி கவளம்’ (பெரும்பாண். 394); “நெய்ம்மலி கவளங் கொள்ளாது” (சீவக. 1076); “நெய்ம்மிதி கவளந் தெவிட்டிநின் றடர்க்கு நிழல்சுளி தறுகண்மால் யானை”, “கைம்முகந் தெடுத்த நெய்ம்மிதி கவளங் களித்தெறி மும்மதக் களிறு” (கூர்ம. சூரியன் மரபு. 8, 22)

4. பலவின்பாற் படர்க்கைவினைக்குறிப்புமுற்று வினையெச்சக் குறிப்பானதற்கு மேற்கோள்; நன். சூ. 350, மயிலை; நன். வி. சூ. 351; இ. வி. சூ. 250.

7. உண்ணுதற்குரிய நீரைப்புக விடாது தடுத்தல் பகைவர்க்குரிய தொழிலாதலின் நீரின்மை கூறப்பட்டது.

9.புறநா. 36 : 11.

10. வய என்னும் உரிச்சொல் ‘வலி’ என்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; இ. வி. சூ. 290, உரை.

11 - 2. புறநா. 390 : 1 - 2; “மறவையா யென்னுயிர்மேல் வந்தவிம் மருண்மாலை” (சிலப். 7 : 42)

16. புறநா. 36 : 13.

11 - 6. “அறவை......காணுங்காலே” என இது செம்பொருட்செவியுறை; தொல். செய். சூ. 128, பேர்.

மு. அகத்தரசற்கு அழிந்து கூறியதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 10, இளம்.

ஆவூர் என்பது சோழ நாட்டின்கண் காவிரியின் தென்பாலுள்ளதான ஒரு பழையவூர் ; பாடல்பெற்ற சிவஸ்தலம்.

நினதெனத்திறத்தல் அல்லது போரொடு திறத்தல் அரசர்க்குரிய இயல்பென்று நினைந்து கூறினமையின், இச்செய்யுள் அரசவாகையாயிற்று.

(44)


1. “அம்ம கேட்பிக்கும்” (தொல். இடை. சூ. 28)