46
நீயே, புறவி னல்ல லன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே, புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்
5களிறுகண் டழூஉ மழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே.

(பி - ம்.) 1 - 2 ‘பிறவும் பலவும்’ 6 ‘மன்ற மருண்டு’

திணையும் துறையும் அவை. (பி - ம். துறை - இயன்மொழி)

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கிடுவுழிக் கோவூர்கிழார் பாடி உய்யக்கொண்டது.

(இ - ள்.) நீதான், புறவின் அல்லலன்றியும் பிறவும் உற்ற துன்பம் பலவற்றையும் தீர்த்த சோழனுடைய மரபிலுள்ளாய்; இவர்தாம், அறிவான் உழுதுண்ணுங் கற்றோரது வறுமையை யஞ்சித் தம்முடைய பொருளைப் பகுத்துண்ணும் குளிர்ந்த நிழலையுடையராய் வாழ்வாரது மரபினுள்ளார்; இவர் இப்பொழுது களிற்றைக் கண்டு தம் இளமையால் தாம் முன்பு வெருவியழு கின்ற அழுகையை மறந்த புல்லிய தலையையுடைய சிறுபிள்ளைகள்; மன்றை வெருவிப்பார்த்து முன்பு அறியாத புதியதோர் வருத்தத்தையுடையர்; இது கேட்டாயாயின், நீ விரும்பியதைச் செய்வாயாக-எ - று.

தண்ணிழல்வாழ்நர் சிறாஅரென இயைப்பினும் அமையும்.

அழாஅல் களிறுகண்டு மறந்தவெனக் கூட்டுக.

நீ புறா முதலாயினவற்றின் துயர்தீர்த்தற்கு உயிர்க்கொடை பூண்டோன் மருகனாதலானும், இவர் கற்றோர் வறுமையஞ்சிப் பகுத்துண்ணும் தண்ணிழல்வாழ்நர் மரபினுள்ளாராதலானும் இவர் நின்னால் அருளத்தகி னல்லது முனியத்தகாரென்பதாம்.

இதுவும், இவரைக் கொல்லாமற் சந்துசெய்வித்தலின் துணைவஞ்சிஆயிற்று.


(கு - ரை.) 1 - 2. விடுத்தோன் - சிபிச்சக்கரவர்த்தி. புறநா. 37 : 5 - 6, குறிப்புரை.

3. புலனுழுதுண்மார் : புறநா. 206 : 2 - 5, குறிப்புரை.

5. அழாஅல்-அழுதல். தம்மைக் கொல்லவந்த களிற்றைக் கண்டவுடன் அழுகையை நீங்கினார் என்றது, அவர்கள் பேதைமையை விளக்கி நின்றது. மலையமானென்றது கோவலூரிலிருந்த சிற்றரசனொருவனை.

மு. துணைவஞ்சியென்னும் துறைக்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 7, இளம்.); இப்பாட்டு மேற்செலவின்கண் அடங்காமையின் துணைவஞ்சியன்றென்றும், பாடாண்டிணையென்றும் கூறுவர்; தொல். புறத்திணை. சூ. 8, ந.

(46)