68
உடும்புரித் தன்ன வென்பெழு மருங்கிற்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித் தாகிய கேள்வி நொந்துநொந்
தீங்கெவன் செய்தியோ பாண பூண்சுமந்
5தம்பகட் டெழிலிய செம்பொறி யாகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர்
10மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன்
உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக்
கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை யறையு மணிகொ டேர்வழிக்
15கடுங்கட் பருகுநர் நடுங்குகை யுகுத்த
நறுஞ்சே றாடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பிற் படுமுழா வோர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.

திணை - அது; துறை - பாணாற்றுப்படை.

சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது.

(இ - ள்.) உடும்புரித்தாற்போன்றஎலும்பெழுந்த விலாப்புடையையுடைய சுற்றத்து மிக்கபசியைத்தீர்ப்பாரைக்காணாதே கேட்டார் பலரும் அறிதற்கரிதாய்அறிவார் சிலராதலின் சில்செவிக்கண்ணதாகியயாழை இப்பாண்சாதியது உணவிற்கு முதலாகப்பெற்ற பரிசுஎன்னென்று வெறுத்து இங்கே என்செய்கின்றாயோபாண! பூணைத்தாங்கி அழகிய பெருமையையுடைய எழில்பெற்றசெம்பொறிபொருந்திய மார்பினையுடைய மென்மையான்மகளிர்க்குத் தாழ்ந்து வன்மையான் வீரரை அகப்படுக்கும்பெருமைபொருந்திய நெடுந்தகை, ஈன்றணிமைபொருந்திஅது தீர்ந்த குழவிக்குச் சுரக்கும் முலைபோல நீர்மிக்ககாவிரியினது கரை மரத்தைச்சாய்க்கும் மிக்கவெள்ளம்உலகத்து உயிர்ப்பன்மையைப் பாதுகாக்கும் நல்லசோழநாட்டையுடைய வேந்தன், உட்பகை ஒரு கூற்றிலே பட்டதென்னும்படிஎம்மைப் புட்செய்யும் பகையிடத்து ஏவானாகலான்யாம் எம்மிற்பொருது மடியக்கடவேமென்று நீங்காதமறத்தையுடையோர் தம்முடைய பூரித்த தோள்களைத்தட்ட அவருடைய மேற்கோள் தணிதற்குக் காரணமாகியபறையறையும் அழகுபொருந்திய தேர்வழிக்கண் வெய்யகள்ளைப்பருகுவார் தம் நடுங்கு கையான் உகுக்கப்பட்டநறிய அச்சேற்றின்கண் ஆடிய பாகரேறாத யானை நெடியநகரிடத்து ஒலிக்கும் பறையினது ஓசையைச் செவிதாழ்த்துக்கேட்கும் உறையூரிடத்தான்; அவ்விறைவன், நீ பிறன்வாயிலைநினையாமை நினக்கு அளிப்பன், அவன்பாற் செல்வையாயின்-எ- று.

செம்பொறியென்றது, “வரையகன்மார்பிடை வரையு மூன்றுள” (சீவக. 1462) என்னும்இலக்கணத்தை; 1 திருமகளெனினும் அமையும்.

உறந்தையோனென்பது வினைக்குறிப்புமுற்று.

பூண்சுமந்தெழிலிய அம்பகட்டாகத்துநெடுந்தகையென இயையும்.
பாண! நீ செலின், நெடுந்தகை, பொருநன், குருசில்,உறந்தையோன்; அவன் பிறன்கடைமறப்ப நல்குவன்; நீஈங்கு எவன் செய்தியோ வெனக் கூட்டுக.

‘உட்பகையொருதிறம் பட்டென’என்பதற்கு உள்ளபகை சந்தாகிய ஒருகூற்றிலே பட்டதாகவென்றுஉரைப்பினும் அமையும்.

பகட்டினுடையதோற்றம் பொலிவுபெறவென்பாரும்உளர்.

‘புட்பகை யேவானாகலின்’ என்றோதி,உள்ளபகை தம்மிற் கூடிற்றாக, புள் நிமித்தத்திற்குப்பகைவன்ஏவானாகலிற் சாவேம்யாமென மறவர் தோள்புடைப்பவென்று உரைப்பாரும் உளர். 2 புட்பகையென்றுஇவனுக்கு ஒருபெயர்.


(கு - ரை.) 1-2. உரித்த உடும்பு என்பிற்குஉவமம். கடும்பு - சுற்றம். இவ்வடிகள் வறுமையின்மிகுதியைப் புலப்படுத்துகின்றன. புல்லென் யாக்கைஎன்பர்.

3. “சில்செவித் தாகியபுணர்ச்சி” (அகநா. 90 : 4)

“புலவுவாய்ப் பாண” (பெரும்பாண்.22) என்பதற்கு, கற்ற கல்வியை வெறுத்துக் கூறுகின்றவாயினையுடைய பாணனே என்று பொருள்கூறி இவ்வடியையேமேற்கோளாகக் காட்டினர் நச்சினார்க்கினியர்.

5. மார்பில் மூன்று வரிகள் கிடத்தல்ஆடவர்க்கு உத்தம இலக்கணம்; புறநா. 161 : 27; “மார்பிற்செம்பொறி வாங்கிய மொய்ம்பு” (முருகு. 104 -5) “பொறிகுலாய்க் கிடந்த மார்பிற் புண்ணியன்”(சீவக. 1706); “செவ்வரை யாகத்தான்” (சீகாளத்தி.நக்கீர. 31)

6-7. புறநா. 10 : 9 - 10, குறிப்புரை.

8. ‘புனிறு’ என்னும் உரிச்சொல்ஈன்றணிமையாகிய குறிப்புப் பொருளை உணர்த்தியதற்குமேற்கோள்; தொல். உரி. சூ. 77, ந.

8-9. கலித். 99 : 4-5, “மணற்கிளைக்கநீரூறு மைந்தர்கள் வாய்வைத், துணச்சுரக்குந் தாய்முலையொண்பால்” (திருவள். 31); “சரயு வென்பதுதாய்முலை யன்னதிவ், வுரவு நீர்நிலத் தோங்கு முயிர்க்கெலாம்”(கம்ப. ஆற்று. 12); “பிள்ளை தைவரப்பெருகுபால் சொரிமுலைத் தாய்போல், மள்ளர் வேனிலின்மணற்றிடர் பிசைந்துகை வருட, வெள்ள நீரிருமருங்குகால் வழிமிதந் தேறிப், பள்ள நீள்வயற்பருமடை யுடைப்பது பாலி” (பெரிய.திருக்குறிப்பு. 22)

11-2. புட்பகை - புள்ளின்தீயநிமித்தம்; அது மயில் வலமாதல், காகம் இடமாதல்முதலியன. “நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ, டெங்கோனேயின னாதலின்” (தொல். புறத்திணை சூ. 3, .மேற்.)

11-3. “ஏகும்மள வையின்வந்தனவலமும்மயி லிடமும், காகம் முத லியமுந்திய தடைசெய்வனகண்டா, னாகம்மன னிடையிங்குள திடையூறென நடவான்,மாகம்மணி யணிதேரொடு நின்றானெறி வந்தான்” (கம்ப.பரசுராம. 5); புள்ளின் தீய நிமித்தத்தையும் மதித்திலரெனமறவரின் வீரச்சிறப்புக்கூறினார்; “உறினுயி ரஞ்சாமறவ ரிறைவன், செறினுஞ்சீர் குன்ற லிலர்” (778)என்னும் குறளும், ‘போர் பெற்று அறியாமையின்,அதுபெற்றால் அரசன் தடுப்பினும் நில்லாரென்பதாம்;பிறரும்........புட்பகைக், கேவானாகவிற் சாவேம் யாமென,நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப’ என்றுங் கூறினார்’என்று வந்துள்ள பரிமேலழகர் வாக்கியங்களும்ஈண்டறியத்தக்கன.

16. “கீழு மேலுங் காப்போர் நீத்த,வறுந்தலைப் பெருங்களிறு” (நற். 182 : 8 - 9)

17. ஓர்க்கும் : “நென்னீ ரெறிந்துவிரிச்சி யோர்க்கும்” (புறநா. 280 : 6); கலித்.46 : 13; அகநா. 88 : 3.
16-7. “நாறுமயிர் மடப்பிடி தழீஇ வேறுநாட்டு,விழவுப்படர் மள்ளரின் முழவெடுத் துயரிக், களிறதர்ப்படுத்த”(அகநா. 189 : 4 - 6)

19. புறநா. 22 : 31-3, குறிப்புரை.

223-ம் திருக்குறளில், ‘இலனென்னும்எவ்வ முரையாமை யீதல்’ என்னும் பகுதிக்குரியவிசேடவுரைகளுள் ‘யான்இலனென்னும் இளிவரவைப்பின்னும், பிறனொருவன் பாற்சென்று அவன் உரையாவகையாற்கொடுத்தல்’ என்னும் பகுதி, இவ்வடியின் பொருளைப்பின்பற்றியது. பொறி, இரேகை, வரை, வரி என்பன ஒருபொருட்சொற்கள். “செருமான வேற்சென்னி தென்னுறந்தையார்தம், பெருமான் முகம் பார்த்த பின்னர்-ஒருநாளும்,பூதலத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாம்,காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்” என்னும்பழைய பாடல் இவ்வடியின் பொருளை நன்குவிளக்குகின்றது. பாண, செலின், நல்குவனெனப் பாணனைஆற்றுப்படுத்தியதாகக் கூறினமையின், இச்செய்யுள்பாணாற்றுப் படையாயிற்று.

(68)


1 புறநா. 7 : 5; “திருமறு மார்பநீ யருளல் வேண்டும்”,“பொன்னிற் றோன்றிய புனைமறு மார்ப” (பரி.1 : 36, 4 : 59); “இருநிலங் கடந்த திருமறு மார்பின்,முந்நீர் வண்ணன்” (பெரும்பாண். 29 - 30); “குருந்தமொசித்தஞான் றுண்டா லதனைக், கரந்த படியெமக்குக்காட்டாய்-மரம்பெறா, போரிற் குருகுறங்கும் பூம்புனனீர்நாட, மார்பிற் கிடந்த மறு” (தொல். புறத்திணை.சூ. 5, . மேற்.)

2. பு. வெ. 33.