(கு - ரை.) 1. அலமரல் - சூரியவெப்பத்தால் உண்டாகும் சுழற்சி. 2 - 4. “விண்செலன் மரபினையர்” (முருகு. 107) என்பதற்கு ‘ஞாயிற்றின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தலாற்றாவென்று கருதித் தமதருளினாற் சுடரொடு திரிந்து அவ்வெம்மையைப் பொறுக்கின்ற முனிவர்’ என்று நச்சினார்க்கினியர்விசேடவுரை யெழுதி இவ்வடிகளை மேற்கோள் காட்டியிருத்தலும், “சுடரொடு திரிதரு முனிவரும்” (சிலப். 12: ‘அவிப்பலி’) என்பதும், ‘ஆதித்தன் வெப்பந்தணிதல் காரணமாக அவனுடனே கூடித் திரியும் முனிவரும்’, ‘கதிரவனுடைய வெம்மை உயிர்களை வருத்தாமல் அதனைத் தாங்கி அவனுடனே சுழன்று திரிதலைச்செய்யும் தெய்வ விருடிகளும்’ என்னும் அதன் உரைகளும் இங்கே அறிதற்பாலன. 6 - 7. ‘என்புமுரியராதல், தன்னகம்புக்க.........சீரைபுக்கோன் முதலாயினார்கட் காண்க’ (குறள், 72, பரிமேல்.) 6 - 8. இவ்வடிகளாற் கூறிய அவ்வரசன்பெருமை கொடையால் உண்டாகிய வீரச்சுவைக்கு உதாரணம் ; தொல். மெய்ப்பாடு. சூ. 9, பேர். 4 - 8. புறநா. 37 : 5 - 6, குறிப்புரை.; “சேர்ந்த புறவி னிறைதன் றிருமேனி, ஈர்ந்திட் டுயர்துலைதா னேறினான்-நேர்ந்த, கொடைவீரமோமெய்ந் நிறைகுறையா வன்கட், படைவீர மோசென்னி பண்பு” (தண்டி. மேற்.) 21 - 3. ஒரு தலைவனை வாழ்த்துங்கால் அவன் ஆட்சிக்குரிய ஆறு முதலியவற்றின் மணலினும் நீ வாழ்க என்று அவனை வாழ்த்துதல் மரபு; அதனை இந்நூல் 9-ஆம் செய்யுளாலு முணர்க. மு. ‘நிலமிசைவாழ்நரென்னும் புறப்பாட்டுப் புலவன் அரசனை வைது ஆறி அது நன்குரைத்தல்; அஃது இயற்கை வகையானன்றிச் செயற்கைவகையாற் பரவலும் புகழ்ச்சியுந் தொடர்ந்த முன்னோர் கூறிய குறிப்பு’ (தொல். புறத்திணை. சூ. 27, ந.) (43)
1. இச்செயல் தருமபுத்திரர்மீது கோபத்தால் விராடவரசன் கவறு கொண்டெறிந்த செய்தியை நினைப்பூட்டுகின்றது.
|