243
இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
5மறையென லறியா மாயமி லாயமொ
டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
10குளித்துமணற் கொண்ட கல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே.

(பி - ம்.) 4 ‘தங்குவழித்தங்கி’5 - 6 ‘லாயமொடு பாசினமருத,,,,,, தாழ்ந்தநீர்க்கணிப்படிந்த ‘9’ நிலையருங்குட்டம்’ 10 - 11 ‘கள்ளாமையளிதோ’

திணையும் துறையும் அவை.

தொடித்தலை விழுத்தண்டினார் பாடியது.

(இ - ள்.) இப்பொழுது நினைந்துஇரக்கமாகாநின்றது: செறிந்த மணலிடத்துச் செய்யப்பட்டவண்டற்பாவைக்குப் (வண்டற்பாவை - விளையாடுதற் பொருட்டுமண்ணாற்செய்த பிரதிமை) பறிக்கப்பட்ட பூவைப்பறித்துச் சூடிக் குளிர்ந்த பொய்கையின்கண்விளையாடும் மகளிரோடு கைகோத்து அவர் தழுவின இடத்தேதழுவி அசைந்த விடத்தே யசைந்து ஒளித்துச்செய்யுமஃதறியாதவஞ்சனையில்லாத இளமைந்தருடனேகூட உயர்ந்தகோடுகளையுடையமருதினது துறையிலே வந்து உறத்தாழ்ந்து நீர்க்கு அண்ணிதாகப்படிந்தகொம்பிலே ஏறி அழகுமிகக் கரையிடத்து நிற்போர்வியப்பத் திரையிடத்துத் திவலையெழ ஆழத்தால்நெடிய நீரையுடைய மடுவின்கண் துடுமென்று ஒலிப்பக்குதித்து மூழ்கி மணலை முகந்து காட்டிய கல்வியில்லாதஇளமை இரங்கத்தக்கது; அவ்விளமை எவ்விடத்துண்டுகொல்லோ பூண்செறிந்த தலையையுடைய பரிய தண்டுக்கோலையூன்றித்தளர்ந்து இருமல் இடையே நெருங்கின சில வார்த்தையுடையபெரிய முதுமையையுடையேமாகிய எங்களுக்கு?- எ - று.

எமக்கு இளமை யாண்டுண்டுகொல்லோ?அதுதான் இரங்கத்தக்க தெனக் கூட்டுக.

இளமைகழிந்து இரங்கிக்கூறுதலான்இதுவும் கையறுநிலையாயிற்று.

‘மறையென வறியார்’ என்றுபாடமோதுவாரும் உளர்.


(கு - ரை.) 1. ‘இனியென்றது, இனிநினைந்திரக்கமாகின்று என்றாற்போல இப்பொழுது என்னும்பொருள் தந்தது’ (கலித். 1, .), ‘இரங்கல்’என்னும் உரிச்சொல் இரக்கமென்றாகி ஒரு பொருளதுகழிவாற் பிறந்த வருத்தமாகிய குறிப்புணர்த்திநிற்குமென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ.61, ந. 1 - 3.

புறநா. 11: 1 - 4.

9. "நெடுநீர்த் தண்கயந் துடுமெனப்பாய்ந்து” (நற். 330: 3)

‘நெடுநீர்க்குட்டத்துத் துடுமெனப்பாய்ந்து என்பதும் இசை’ (தொல். இடை. சூ. 10, ந.;நன். வி. சூ. 424); ‘துடும்’ என்னும் சொல் ஓசைப்பொருண்மேல் வந்ததற்கு மேற்கோள்; நன். சூ.420, மயிலை.

6 - 9. "கரைசேர் மருத மேறிப், பண்ணைபாய்வோள்” (ஐங்குறு. 74)

14. ‘’பெருமூ தாள ரேமஞ் சூழ” (முல்லை.54)

12 - 4. தொடித்தலை........எமக்கே: என்பதுதன்கட்டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது;என்னை? இளமைக்காலத்துச் செய்தன செய்யமாட்டாதுஇளிவந்தனம் இக்காலத்து என்றமையின்’ (தொல்.மெய்ப்பாடு. சூ. 6, பேர்.; இ. வி. சூ. 578, உரை)

மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,‘கழிந்தோரொழிந்தோர்க்குக் காட்டியமுதுமை’என்பதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ.24, .

(243)