5
எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பிற்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல்
5அருளு மன்பு நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்
குழவி கொள்பவரி னோம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே.

திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ;பொருண்மொழிக் காஞ்சியுமாம்.

சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரலிரும்பொறையைக்கண்டஞான்று நின் உடம்பு பெறுவாயாகென அவனைச் சென்றுகண்டு தம்முடம்பு பெற்றுநின்ற நரிவெரூஉத்தலையார்பாடியது.

(இ - ள்.) எருமைபோலும்வடிவையுடைய கரிய கற்பொருந்திய இடந்தோறும் பெற்றம்போலப்பரக்கும் யானையையுடையவாய் வலியையுடைய காட்டிற்குள்ளாகியநாட்டினையுடையாய்! பெரும! நீ இங்ஙனம் பகைவரான்அணுகப்படாத இயல்பாகிய பெருஞ்செல்வத்தையுடைய னாதலால்,நினக்கு ஒரு காரியஞ் சொல்வேன்; அதனைக் கேட்பாயாக;அருளையும் அன்பையும் நீக்கிப் பாவஞ்செய்தாரைநீங்காத நரகத்தைத் தமக்கிடமாகக் கொள்பவரோடுபொருந்தாது நீ காக்கப்படும் தேயத்தைக் குழவியைவளர்ப்பாரைப்போலப் பாதுகாப்பாயாக; அளிக்கத்தக்கதொன்று அக்காவல்; அது பெறுதற்கரிது, எ - று.

காவலென்றது (7) ஆகுபெயர். நாடனை (3): ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது. ஓவும், ஓரும் :அசைநிலை.

அருளாவது: - ஒன்றின் துயர்கண்டாற்காரணமின்றித்தோன்றும் இரக்கம் (தொல்.பொருள். 53, ந.)

அன்பாவது: - தன்னாற் புரக்கப்படுவார்மேலுளதாகிய காதல். (தொல். பொருள். 53, ந.)

இனி, ஓகாரத்தைப் பிரித்துவினாவாக்கிக் கோப்பெருஞ்சேரலிரும் பொறையைக்கண்டஞான்று நின்னுடம்புபெறுவாயெனத் தம்முடம்பு பெற்றமைதோன்ற, நீயோவென வினாவினாராக்கியுரைப்பாருமுளர்.
காவல் குழவிகொள்பவரினோம்பென்றமையாற் செவியறிவுறூஉவும்,அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங்கொள்பவரொடொன்றாதென்றமையாற்பொருண்மொழிக் காஞ்சியுமாயிற்று.


(கு - ரை.) 1. “மேதி யன்ன கல்”(மலைபடு. 111)

2. ஆபரந் தன்ன செலவிற்பல், யானை”,“ஆபரந்தன்ன யானையோன் குன்றே” (பதிற்.77 : 11 - 2, 78 : 14)

3. “வான வரம்பனை நீயோ பெரும”(புறநா. 2 : 12); தொல். இடை. சூ. 8. தெய்வச்.மேற்.

1 - 3. “எருமை........பெருமவென்பது,நரிவெரூஉத்தலையார் தம் உடம்பு பெற்று வியந்து கூறியபாட்டாகலின், இது தன்கட்டோன்றிய ஆக்கம் பற்றிவியப்புப் பிறந்ததாயிற்று” (தொல். மெய்.சூ. 7, பேர்.; இ. வி. சூ. 578)

6 - 7. புறநா. 4 : 18-9-ஆம்குறிப்புரையைப் பார்க்க. மக்கட் கணின்ற இளமைப்பெயர்க்குஇது மேற்கோள்; தொல். மரபு. சூ. 23, பேர்.

8. “அளிதோ.....குரைத்தே : இஃதுஇசைநிறை” (தொல். இடை. சூ. 24. சே.; தெய்வச்.;ந.; இ. வி. சூ. 278); “என்றிசினோர், பெறலருங்குரைத்துஎன்பன போலச் செய்யுண் முடிபு பெற்று நின்றதென்றலேபொருத்த முடைத்து” (தொல். எச்ச. சூ. 1, சே.);குரையென்னும் அசைநிலையிடைச்சொல் வந்துள்ளதொடர்மொழிக்குஇது மேற்கோள் (நன். மயிலை. சூ. 440; நன்.வி. சூ. 441). “கண்ணிற் சொலிச் செவியினோக்கு மிறைமாட்சி, புண்ணியத்தின் பாலதே” (நீதிநெறி.28) என்பது இங்கே அறியற்பாலது.

மு : “எருமை......குரைத்தே :இதனுள் நிரயங்கொள்பவரொடொன்றாது காவலையோம்பெனவேம்புங் கடுவும்போல வெய்தாகக் கூறி அவற்கு உறுதிபயத்தலின், வாயுறைவாழ்த்தாயிற்று” (தொல்.புறத்திணை. சூ. 35, ந.) (5)