12
பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர்மண்கொண்
5டினிய செய்திநின் னார்வலர் முகத்தே.

திணை - அது; துறை - இயன்மொழி.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

(இ - ள்.) பாணர் பொற்றாமரைப் பூவைச் சூடவும், புலவர் பட்டம் பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப அமைக்கவும், அறனோ இவ்வாறு செய்தல்? வென்றி மாட்சிமைப்பட்ட குடுமி ! வேற்றரசருடைய நிலத்தை அவர்க்கு இன்னாவாகக் கொண்டு நின்னுடைய பரிசிலரிடத்து இனியவற்றைச் செய்வை - எ - று.

குடுமி ! பிறர்மண் இன்னாவாகக்கொண்டு, மலையவும் பண்ணவும் நின் ஆர்வலர் முகத்து இனியசெய்வை; இது நினக்கு அறனோ? சொல்லு வாயாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

மற்று : அசைநிலை.

இது பழித்ததுபோலப் புகழ்ந்ததாகக் கொள்க.


(கு - ரை.) 1. இந்நூல், 11-ஆம் பாட்டின் 11 - 7-ஆம் அடிகளின் குறிப்பைப் பார்க்க.

3 - 5. “அறனோ....முகத்தே....இவை சொல்லுவான் குறிப்பினாற் பொருளறிய வந்தன” (நன். மயிலை. சூ. 268; நன். வி. சூ. 269)

மு. இச்செய்யுள், கொடுத்தலெய்திய கொடைமைக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 7, இளம். (12)