திணையும் துறையும் அவை. அவனை அவள் காரணமாக அவர் பாடியது. (இ - ள்.) மெல்லிய தகைமையையுடைய கரிய மயில் குளிரால் நடுங்குமென்று அருள்செய்து படாம் கொடுத்த அழியாத நல்ல புகழினை யுடைய மதம்பட்ட யானையையும் மனஞ்செருக்கிய குதிரையையுமுடைய பேக! யாம் பசித்தும் வருவேமல்லேம்; எம்மாற் பரிக்கப்படுஞ் சுற்றமுமுடை யேமல்லேம்; களாப்பழம்போன்ற கரிய கோட்டையுடைய சிறிய யாழை 1இசையின்பத்தை விரும்பியுறைவார் அவ்விசையின்பத்தால் தலையசைத்துக் கொண்டாடும்படி வாசித்து, அறத்தைச் செய்வாயாக அருளை விரும்புவோ யென இது நின்பால் யாம் இரந்த பரிசில்: இற்றையிரவின்கண் இனமாகிய மணியையுடைய உயர்ந்த தேரை ஏறிப்போய்க் காண்டற்கு இன்னாதாக உறைகின்றவள் பொறுத்தற்கரிய நினைவாலுண்டாகிய நோயைத் தீர்ப்பாயாக-எ - று. பேக! தேரேறி இன்னாதுறைவி அரும்படர் களை; யாழைப் பண்ணி யாம் இரந்த பரிசில் இதுவெனக் கூட்டுக. இதுவென்றது, அப்படிப் படர் களைதலை. 'மடத்தகை மாமயில் பனிக்குமென்றருளிப், படாஅ மீத்த...... பேக' என்ற கருத்து: இவ்வாறு ஒரு காரணமின்றியும் அருள்பண்ணுகின்ற நீ நின்னால் வருந்துகின்ற இவட்கு அருளாதொழிதல் தகாதென்பதாம். இனி, அருள்வெய்யோய்! யாம் இரந்த பரிசில், அறஞ்செய்யவேண்டு மென்று கூறும் இது; அவ்வறந்தான் யாதென்று கேட்பின், நின்பால் அருள் பெறாமையின் இன்னாதுறைவி அரும்படரை நீசென்று களைதல்; அதனைச் செய்வாயாகவெனக் கூட்டியுரைப்பினும் அமையும். 'பனிக்குமென்றஞ்சி' என்பதூஉம் பாடம். |