(கு - ரை.) 1. விசும்பு நீத்தம் - விசும்பாகிய நீத்தத்தை ; ‘நீத்தம்’ என்றார் கடத்தற்கு அருமையின். இறந்த - கடந்த. 2. மழுகிய - ஒளி குறைந்த. அந்தி - மாலைக்காலம். 1 - 2. “சுடர்கெழு மண்டில மழுக ஞாயிறு, குடகடல் சேரும் படர்கூர் மாலை” (அகநா. 378 ; 14 - 5) 4. தெடாரி ; மோனைநோக்கி எகரமாயிற்று ; புறநா. 368 : 15. “சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி” (புறநா. 381 : 12) 5. ஆரும் - உண்ணும். 6. யாணர் நன்மனை - புதுவருவாயை யுடைய நல்ல வீடு. கூட்டு முதல் - தானியக் கூட்டின் அடியில் ; (புறநா.396 : 19) 7. இமைத்தோர் - இமைகொட்டுவோர். மாத்திரை - அளவு. ஞெரேரென - விரைவாக. 8. குணக்கு - கிழக்கு. கனை - செறிவு. 9. “மாலை யன்னதோர் புன்மையுங் காலைக், கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும்” (பொருந. 96 - 7). 10. பருஇழை - பரிய நூலிழை. 11. பறைந்த - தேய்ந்த ; புறநா. 359 ; 1. 9 - 11. “அரையது, வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர், ஓம்பி யுடுத்த வுயவற் பாண”, “கூதிர்ப் பருந்தி னிருஞ்சிற கன்ன, பாறிய சிதாரேன்” (புறநா. 69 : 2 - 4, 150 ; 1 - 2) ; ஈரும் பேனு மிருந்திறை கூடி, வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த, துன்னற் சிதாஅர்”, “பாசி வேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதாஅர்” (பொருந. 79 - 81, 153 - 4) 13. முரற்கை - தாளம் ; எங்களைப் பாடாதவாறு செய்தென்றபடி. 14. புறநா. 392 ; 16 ; “பாப்புக் கடுப்பன்ன தோப்பி” (அகநா. 348 : 7); “பாம்புவெகுண் டன்ன தேறல்” (சிறுபாண். 237). சூடு - சூட்டிறைச்சி ; புறநா. 34, 369, 395, 397. 15. நிரயத்தன்ன வறன் - நரகவேதனை போன்ற துன்பத்தைச் செய்விக்கும் வறுமை. 17 - 8. “இலனென்னு மெவ்வ முரையாமை யீதல், குலனுடையான் கண்ணே யுள” (குறள், 223) என்பதையும் அதற்குப் பரிமேலழகர் எழுதிய விசேடவுரையையும், விநாயக புராணம், அரசியற்கைப்படலம், 38 - ஆம் பாடல் முதலியவற்றையும் பார்க்க. நிரப்படுபுணை - வறுமையைக் கடத்தற்குரிய தெப்பம். 20. நிறைக்குளப்புதவு - நீர்நிறைந்திருத்தலையுடைய குளத்தின் வாய்த்தலை ; புறநா.24 : 19. 21. இரவலர் வரையா - யாசகரை நீக்காத. வள்ளியோர் - வரையாது கொடுப்போர். கடைத்தலை - தலைவாயில். 22. ஞாங்கர் - பக்கம். நெடுமொழி - தனது மேம்பாட்டைக் கூறுமொழி. 18 - 23. இவ்வடிகளின் பொருள், "செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம், பெருமான் முகம்பார்த்த பின்னர் - ஒருநாளும், பூதலத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாம், காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்" (தண்டி. சூ. 21, உரை, மேற்.) என்னும் வெண்பாவை நினைப்பிக்கின்றது. மு. புறநா. 68 : 19, 148. (376)
|