379
யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை
அவனே பெறுகவென் னாவிசை நுவறல்
நெல்லரி தொழுவர் கூர்வாண் மழுங்கிற்
பின்னை மறத்தோ டரியக் கல்செத்
5தள்ளல் யாமைக் கூன்புறத் துரிஞ்சும்
நெல்லமல் புரவி னிலங்கை கிழவோன்
வில்லி யாதன் கிணையேம் பெரும
குறுந்தா ளேற்றைக் கொழுங்க ணவ்விளர்
நறுநெய் யுருக்கி நாட்சோ றீயா
10வல்ல னெந்தை பசிதீர்த் தல்லெனக்
கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
விண்டோய் தலைய குன்றம் பின்பட
..................... ரவந்தனென் யானே தாயில்
15தூவாக் குழவி போல வாங்கத்
திருவுடைத் திருமனை யைதுதோன்று கமழ்புகை
வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்படு குண்டகழ் நீண்மதி லூரே.

(பி - ம்.) 4 ‘பிள்ளைமறத்தோடு’ 6 ‘கெலலமல்’ 11 ‘கொனவல்’
18 ‘குறுமபடுநதொடகழிநீண்’

திணை - அது; துறை - பரிசிற்றுறை.

ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் (பி - ம். நன்னாதன்)


(கு - ரை.) 1. "திருந்துகழ னோன்றாட் டண்ணிழி லேமே" (புறநா. 397 : 27). வாழ்க்கையை யான் பெறுவேன்.

2. இசை - கீர்த்தி. நுவறலை அவன் பெறுக.

3. தொழுவர் - தொழிலைச் செய்வோர் ; "நெல்லரியு மிருந்தொழுவர்", "நெல்லரி தொழுவர்" (புறநா. 24 : 1, 209 : 2) ; "நெல்லரி தொழுவர்" (நற். 195 : 6). வாள் - அரிவாள்.

இவ்வடி, தொல். எச்ச. சூ. 19, ந. மேற்.

4. அரிய - அரிதற்கு. கல் செத்து - தீட்டுங் கல்லாக அறிந்து.

5. அள்ளல் - சேறு. புறம் - முதுகு. உரிஞ்சும் - தீட்டும்.

6. அமலுதல் - நெருங்குதல் ; "கண்பமல் பழனம்" (மலைபடு. 454). புரவு - விளைநிலம்; புறநா. 260 : 9. இலங்கை - மாவிலங்கையென்னுமூர் ; புறநா. 176 : 6; "தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய, நன்மா விலங்கை மன்ன ருள்ளு, மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா, ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்" (சிறுபாண். 119-22)

3 - 6. "அன்னந் துயிலெழுப்ப வந்தா மரைவயலிற், செந்நெலரிவார் சினையாமை - வன்முதுகிற், கூனிரும்பு தீட்டுங் குலக்கோ சல நாடன்" (நள. சுயம்வர. 143)

8. குறுந்தாளேற்றை - ஆண்பன்றி. விளர் - வெண்மை ; விளரூன் : புறநா. 359 : 5, குறிப்புரை.

9. நாட்சோறு ஈயா - காலையுணவை அளித்து.

9 - 10. ஈயாப் பசிதீர்த்தல்வல்லன்.

11. கொன்வரல் வாழ்க்கை - விடியற்காலத்தில் வந்து தடாரி வாசித்தலாலுண்டாகிய செல்வம் ; கொன் -விடியற்காலம். விடியற்காலத்துக் கிணைப்பறைகொட்டித் தலைவன் புகழைப் பாடுதல் பொருநர்க் கியல்பு. (சீவக. 173, ந. மேற்.)

12. தண்டாது - அமையாமல்.

13. விண் தோய் - ஆகாயத்தை அளாவிய. 15. தூவா - உண்ணாத.

14 - 5. "தாயி றூவாக் குழவி போல" (புறநா. 4 : 18)

16. ஐது - மெல்லிது.

17. மங்குலின் - மேகம்போல. உடன் - ஒருங்கு.

ஊர் (18) வந்தனென் (14)

(379)