திணையும் துறையும் அவை. சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது, (இ - ள்.) உயிர்ப்பன்மையைக்காக்கும் நினது உயர்ச்சியைப் பாராது காதல் கண்மாறிய அறமில்லாத பார்வையுடனேகூடி நும்போல்வார் யாவரும் இதற்கு ஒத்த அறிவையுடையராய் அருள்மாறுவாராயின் எம்போல்வார் இவ்வுலகத்துப் பிறவாதொழியக்கடவர்; குற்றந்தீர்ந்த கற்பினையுடையளாய எம்மை விரும்பிய காதலி இறந்துபடாது உயிர்வாழ்வுடையாளாகக் கூடின் எம்மிடத்து நினையாதிருத்தல் அரிது; அதனால், அறனில்லாத கூற்றம் திறப்பாடின்றி உயிர்கொளத் துணிய இறந்துபட்டான் கொல்லோ? என்னுயிர் கெடுவதாகவென்று சொல்லுதலுற்ற நோயையுடையாளாய்ப் பலபட வெறுத்துறையும் மனைவியது துன்பம் தீர்க்க வேண்டி இப்பொழுதே விடைகொண்டேன்; வாழ்வாயாக; இறைவ! இதனைப் பாராய்: இன்னாமையையுடைய நெஞ்சத்துடனே போவேன், நின்னை வெகுண்டாரது அணுகுதற்கரிய காவலையுடைய முனையிடத்து அரணைப்போலப் பெரிய செயலற்ற எனது வறுமையை முன்போகவிட்டு-எ - று. குருசிலே! நும்மனோரும் இனையராயின் எம்மனோர் இவட்பிறவார்; எம் காதலி உயிர் சிறிது உடையளாயின் நினையாதிருத்தல் அரிது; அதனால், அம்மனையோள் இடுக்கண் தீர்க்கவேண்டி இப்பொழுதே விடுத்தேன்; நிற்கறுத்தோர் முனையரண்போலக் கையற்ற என் புலம்பு முந்துறுத்துச் செல்வேன்; வாழியரெனக் கூட்டி வினைமுடிவுசெய்க. ‘உதுக்காண்’ என்றது அச்செலவை. என்வறுமை என்னை விட்டு் நீங்கப்போதலையொழியப் புலம்பை முந்துறுத்துக்கொண்டு போகாநின்றேனென இரங்கிக் கூறியவதனால், வாழியர் குருசில் என்பது இகழ்ச்சிக்குறிப்பாயிற்று. ‘உயிர்வெங் காதலி’ என்று பாடமோதுவாரும் உளர். |