210
மன்பதை காக்குநின் புரைமை நோக்கா
தன்புகண் மாறிய வறனில் காட்சியொடு
நும்ம னோருமற் றினைய ராயின்
எம்ம னோரிவட் பிறவலர் மாதோ
5செயிர்தீர் கொள்கை யெம்வெங் காதலி
உயர்சிறி துடைய ளாயி னெம்வயின்
உள்ளா திருத்தலோ வரிதே யதனால்
அறனில் கூற்றந் திறனின்று துணியப்
பிறனா யினன்கொ லிறீஇயரென் னுயிரென
10நுவல்வுறு சிறுமையள் பலபுலந் துறையும்
இடுக்கண் மனையோ டீரிய விந்நிலை
விடுத்தேன் வாழியர் குருசி லுதுக்காண்
அவல நெஞ்சமொடு செல்வனிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
15பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறத்தே.

திணையும் துறையும் அவை.

சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது,

(இ - ள்.) உயிர்ப்பன்மையைக்காக்கும் நினது உயர்ச்சியைப் பாராது காதல் கண்மாறிய அறமில்லாத பார்வையுடனேகூடி நும்போல்வார் யாவரும் இதற்கு ஒத்த அறிவையுடையராய் அருள்மாறுவாராயின் எம்போல்வார் இவ்வுலகத்துப் பிறவாதொழியக்கடவர்; குற்றந்தீர்ந்த கற்பினையுடையளாய எம்மை விரும்பிய காதலி இறந்துபடாது உயிர்வாழ்வுடையாளாகக் கூடின் எம்மிடத்து நினையாதிருத்தல் அரிது; அதனால், அறனில்லாத கூற்றம் திறப்பாடின்றி உயிர்கொளத் துணிய இறந்துபட்டான் கொல்லோ? என்னுயிர் கெடுவதாகவென்று சொல்லுதலுற்ற நோயையுடையாளாய்ப் பலபட வெறுத்துறையும் மனைவியது துன்பம் தீர்க்க வேண்டி இப்பொழுதே விடைகொண்டேன்; வாழ்வாயாக; இறைவ! இதனைப் பாராய்: இன்னாமையையுடைய நெஞ்சத்துடனே போவேன், நின்னை வெகுண்டாரது அணுகுதற்கரிய காவலையுடைய முனையிடத்து அரணைப்போலப் பெரிய செயலற்ற எனது வறுமையை முன்போகவிட்டு-எ - று.

குருசிலே! நும்மனோரும் இனையராயின் எம்மனோர் இவட்பிறவார்; எம் காதலி உயிர் சிறிது உடையளாயின் நினையாதிருத்தல் அரிது; அதனால், அம்மனையோள் இடுக்கண் தீர்க்கவேண்டி இப்பொழுதே விடுத்தேன்; நிற்கறுத்தோர் முனையரண்போலக் கையற்ற என் புலம்பு முந்துறுத்துச் செல்வேன்; வாழியரெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

‘உதுக்காண்’ என்றது அச்செலவை.

என்வறுமை என்னை விட்டு் நீங்கப்போதலையொழியப் புலம்பை முந்துறுத்துக்கொண்டு போகாநின்றேனென இரங்கிக் கூறியவதனால், வாழியர் குருசில் என்பது இகழ்ச்சிக்குறிப்பாயிற்று.

‘உயிர்வெங் காதலி’ என்று பாடமோதுவாரும் உளர்.


(கு - ரை.) 1. புறநா. 71 : 17; கலித். 65 : 3.

2. கண்மாறிய - நீங்கிய.

3. ‘நும்ம னோருமற் றினையராயி னென்புழி அன்னோரென்பது உவமவுருபாகிய இடைச்சொன் முதனிலையாகப் பிறந்த பெயர்” (தொல். எச்ச. சூ. 18, .)

3-4. தொல். எச்ச. சூ. 14, . மேற்.; ‘நும்ம னோருமற் றினையராயின், எம்ம னோரிவட் பிறவலர் மாதோ: என்புழி அன்னோரென்பது இடைச்சொன் முதனிலையாகப் பிறந்த குறிப்புப்பெயராகலானும், நும்மையன்னோர் எம்மையன்னோரென இரண்டாவது விரித்தற்கேற்புடைமையறிக’ (தொல். எச்ச. சூ. 18, சே.)

5. “செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ” (புறநா. 3 : 6)

7. மு. புறநா. 237 : 9.

14. முனை - பகைப்புலம்.

15. புலம்பு - வறுமை.

(210)