83
அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்
தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே
அடுதோண் முயங்க லவைநா ணுவலே
என்போற் பெருவிதுப் புறுக வென்றும்
5ஒருபாற் படாஅ தாகி
இருபாற் பட்டவிம் மைய லூரே.

(பி - ம்.) 3 ‘அடுதொறுமுயங்கல்’4 ‘எம்போற்பெருவிதிர்ப்பு’

திணை - கைக்கிளை; துறை - பழிச்சுதல்.

அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்பாடியது.

(இ - ள்.) அடியின்கட் புனைந்தசெறிந்த வீரக்கழலினையும் மைபோன்ற 1 தாடியினையுமுடையஇளையோன்பொருட்டு எனது வளை என்னைக் கைவிடுதலான்,யான் யாயை அஞ்சுவேன்; அவன்பகையைக் கொல்லுந்தோளைத் தழுவுதற்கு அவையின்கண்ணுள்ளாரை நாணுவேன்;என்னைப்போல மிக்க நடுக்கமுறுவதாக, எந்நாளும்,யாயேயாதல் அவையேயாதல் ஒருகூற்றிற் படாதாகியாயும் அவையுமாகிய இரு கூற்றிற்பட்ட இம்மயக்கத்தையுடையஊர்-எ - று.

மையலூர் பெருவிதுப்புறுகவெனக் கூட்டுக.

யாயில்லையாயின், வளை கழலுதற்குஅஞ்சவேண்டா; அவையில்லையாயின், முயங்குதற்கு அஞ்சவேண்டாவென்பதுகருத்தாகக் கொள்க,.

‘ஒருபாற் படாஅ தாகி யிருபாற் பட்டவிம்மையலூர்’ என்பதற்கு 2 அச்சமும் நாணு முண்டாய்வருந்தும் என்கூற்றிலும் நில்லாது என்காதலறிந்துஅவனோடு கூட்ட நினையாத யாய்கூற்றிலும் நில்லாதுஇருவர் கூற்றிலும் நின்று மயங்குகின்ற ஊரெனினும்அமையும்.


(கு - ரை.) 1. தொடுகடல் - செறித்தகழல்; புறநா. 77 : 1. மையணற்காளை: “செய்வினைப்பொலிந்த செறிகழ னோன்றாள், மையணற் காளையொடு”(ஐங்குறு. 389); “மையணற் காளை மகிழ்துடி” (பு.வெ. 12)

4. மு. புறநா. 255 : 3, 291 : 5. ‘என்போற்பெருவிதுப் புறுக வென்புழி, போலென்பது போல என்னுஞ்செயவெனெச்சக் குறிப்பாகிய உவமவுருபு’ (தொல்.எச்ச. சூ. 18, ந.)

6. மையலூர்: குறுந். 374 : 7.

மு. ‘அடிபுனை தொடுகழன்.....மைய லூரே:இது பெருங்கோழி நாய்கன் மகளொருத்தி, ஒத்தஅன்பினாற் காமமுறாதவழியும் குணச்சிறப்பின்றித்தானே காமமுற்றுக் கூறியது இதனின் அடக்குக’ (தொல்.புறத்திணை. சூ. 28, ந.)

(83)

1 தாடி-வீசை; “இரலை, மருப்பிற்றிரிந்து மறிந்துவீழ் தாடி” (கலித். 15); “கலையிருமருப்பிற் கோடிக் காதள வோடுந் தாடி”(திருவிளை. 26 : 22)

2 “அச்சமு நாணு மடனுமுந் துறுத்த, நிச்சமும் பெண்பாற்குரிய வென்ப” (தொல். களவு. சூ. 8); உட்கு நாணு மொருங்குவந்தடைதர”(பெருங். 3. 6 : 87, 4-13 : 100)