217
நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே
எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல்
அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத்
தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி
5இசைமர பாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
10அதனால், தன்கோ லியங்காத் தேயத் துறையும்
சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை யிழந்தவிவ் வுலகம்
என்னா வதுகொ லளியது தானே.

திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை.

அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது,

(இ - ள்.) கருதுங்காலத்து வியக்குந்தன்மையையுடைத்து, எத்துணையும் பெரியதலைமையுடனே கூடியும் இவ்விடத்தே இவன் சிறப்புக்களைக் கைவிட்டுவரத் துணிதல்; இவன் இவ்வாறு துணிந்த அதனினும் வியக்குந் தன்மையையுடைத்து, வேற்று வேந்தனது நாட்டின்கண் விளக்கம் அமைந்த சான்றோன் பாதுகாத்துப் புகழ்மேம்பாடாக நட்பே பற்றுக் கோடாக இத்தன்மைத்தாகிய ஓர் இன்னாக்கலத்து இவ்விடத்து வருதல்; இவ்வாறு வருவனென்று துணிந்துசொல்லிய வேந்தனது மிகுதியும் அவன் சொல்லிய சொற் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்புக் கைமிக்கது; ஆதலால், தன்செங்கோல் செல்லாத தேயத்துறையும் அமைந்தோனது நெஞ்சைத் தன்னிடத்தே உரித்தாகப்பெற்ற பழைய புகழையுடைய அப்பெற்றிப்பட்ட பெரியோனை இழந்த இத்தேயம் இடும்பையுறுங்கொல்லோ? 1இதுதான் இரங்கத் தக்கது-எ - று.

இதுவென்பது, அரசினைக் கைவிட்டு இறந்துபடத்துணிதலென்றுமாம்.


(கு - ரை.) 4-6. “இடரொருவ ருற்றக்கா லீர்ங்குன்ற நாட, தொடர் புடையே மென்பார் சிலர்” (நாலடி. 113);

“கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக், கெட்டார்க்கு நட்டாரோ வில்” (பழ. 59)

(217)


1.‘கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் போல உணர்ச்சி யொப்பின் அதுவே உடனுயிர்நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்’ (குறள், 785, பரிமேல்.); ‘இதற்குக் கோப்பெருஞ்சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம்’ (தொல். கற்பியல், சூ, 52. .)