48
கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கண்ணா றும்மே கானலந் தொண்டி
5அஃதெம் மூரே யவனெம் மிறைவன்
அன்னேற் படர்தி யாயி னீயும்
எம்மு முள்ளுமோ முதுவா யிரவல
அமர்மேம் படூஉங் காலைநின்
புகழ்மேம் படுநனைக் கண்டன மெனவே.

(பி - ம்.) 7 ‘எம்மையு’

திணை - பாடாண்டிணை; துறை - புலவராற்றுப்படை.

1சேரமாண் கோக்கோதைமார்பனைப் பொய்கையார் பாடியது.

(இ - ள்.) கோதையுடையமார்பிற்கு அணிந்த கோதையானும், அக்கோதையைப் புணர்ந்த மகளிர்சூடிய கோதையானும், கரியகழியின் கண்மலர்ந்த நெய்தற்பூவானும் தேன் நாறாநிற்கும் கானலையுடைய தொண்டி; அஃது எம்முடைய ஊர் ; அவன் எம்முடைய தலைவன்; அத் தன்மையோனிடத்தே போகின்றாயாயின், நீயும் எம்மையும் நினைப்பாயாக; முதிய வாய்மையையுடைய இரவல! நீ அமரின்கண் மேம்படுங்காலத்து நினக்கு உளதாகிய புகழை மேம்படுத்துமவனைக் கண்டேம் யாமெனச் சொல்லி-எ - று.

இரவல! நீயும் அன்னோற் படர்குவையாயின் நின்புகழ்மேம்படு நனைக் கண்டனமென எம்மையும் உள்ளெனக் கூட்டுக.

கண்டனமென எம்முமுள்ளென்றாரேனும், உள்ளிக் கண்டனமெனச் சொல்லென்பது கருத்தாகக் கொள்க.

மோ : முன்னிலை அசைச்சொல். நீயுமென்பதூஉம், எம்முமென்ப தூஉம் எச்சவும்மை.

தலைவனது இயல்பையும் ஊரையுங் கூறி, முதுவாயிரவல! எம்மும் உள்ளெனத் தன் தலைமைதோன்றக் கூறினமையால், இது புலவராற்றுப்படைஆயிற்று.


(கு - ரை.) 1. கோதை - சேரன் ; மாலை.

1 - 2. மோனைத்தொடைக்கும் (தொல். செய். சூ. 92, பேர்.), பிறவடிதொடுத்த கட்டளையடி மோனைக்கும் (தொல். செய். சூ. 92, ந.) மேற்கோள்.

4. தொண்டி : புறநா. 17 : 13; ஐங்குறு. 178.

7. முதுவாயிரவல : புறநா. 180 : 9; பதிற். 66; சிறுபாண். 40.

(48)


1. இப்பாட்டின் முதலடியில் தலைவன் பெயர் அமைந்துள்ளது.