49
நாட னென்கோ வூர னென்கோ
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்ப னென்கோ
யாங்கன மொழிகோ வோங்குவாட் கோதையைப்
புனவர் தட்டை புடைப்பி னயல
5திறங்குகதி ரலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே.

(பி - ம்.) 3 ‘யாங்ஙன’ 4 - 5 ‘னயலினிரங்கு’

திணையும் துறையும் அவை; துறை-இயன்மொழியுமாம்.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) குறிஞ்சிநிலமுடைமையால், நாடனென்று சொல்லுவேனோ? மருதநிலமுடைமையால், ஊரனென்று சொல்லுவேனோ? நெய்த னிலமுடைமையால், ஒலிமுழங்குகின்ற குளிர்ந்த கடலையுடைய சேர்ப்ப னென்று சொல்லுவேனோ? எவ்வாறு சொல்லுவேன் மேம்பட்ட வாளை யுடைய கோதையை? புனங்காப்போர் கிளிகடிகருவியைப் புடைப்பின், அப்புனத்திற்கு அயலாகிய வளைந்த நெற்கதிர்சுழலும் வயலின்கண்ணும், மிக்கநீரையுடைய கடற்கரையின்கண்ணும் உளவாகிய புட்கள் சேர எழுமாதலான்-எ - று.

‘புனவர்தட்டைபுடைப்பின்’ எனக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்பக் கூறினமையான், நாடனென்பதூஉம் அவ்விரண்டு நிலத்துக்கும் கொள்ளப் படும்; எனவே முல்லைநிலமும் உடையனென்றவாறாம்.

புனவர் தட்டைபுடைப்பின், கழனியிலும் சேர்ப்பினும் புள்ளெழு மாதலால், கோதையை யாங்கனம் மொழிகோவெனக் கூட்டுக.

இது, நானிலமுமுடையனாதலிற் பெருஞ்செல்வமுடையன்; நீ அவன்பாற் செல்லென ஆற்றுப்படுத்தவாறு; அவனது இயல்பைப் புகழ்ந்தமையான் இயன்மொழியுமாயிற்று.


(கு - ரை.) 2. “பாடிமிழ் பனிக்கடல்” (முல்லை. 4)

1 - 3. சேரனது நாடு நானிலவளமுடையது: “திரைசெய் கடலின் பெருவளனுந் திருந்து நிலனின் செழுவளனும், வரையின்வளனு முடன்பெருகி மல்கு நாடு மலைநாடு” (பெரிய. 7 : 1)

4. தட்டை : “வெதிர்புனை தட்டையேன்” (நற். 147); “தழலுந்தட்டையு முறியுந் தந்து” (குறுந். 223); “தழலை வாங்கியுந் தட்டையோப்பியும்” (அகநா. 188); “ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்” (மலைபடு. 328); ‘தட்டையாவது :-மூங்கிலைக் கண்ணுக்குக் கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாக ஒன்றிலே தட்டுவதொரு கருவி’ (குறிஞ்சிப். 43, ந.)

4 - 6. திணைமயக்கத்திற்கு மேற்கோள்; திருச்சிற். 63, பேர்.

(49)