திணையும் துறையும் அவை.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. (இ - ள்.) புறவினது வருத்தத்தைக் களையவேண்டிக் கறைபொருந்திய அடியினையுடைய யானையினது வெளிய கோட்டாற் கடைந்து செறிக்கப்பட்ட வெளிய கடையினையுடைய கோலாகிய நிறுக்கப்படும் துலாத்தின்கண்ணே துலைபுக்க செம்பியனது மரபினுள்ளாயாதலான், இரந்தோர்க்குக் கொடுத்தல் நினக்கு இயல்பாவதல்லது புகழுமல்லவே; அசுரர்க்குப் பகைவராகிய தேவர்கள் கிட்டுதற்கு வெருவும் அணுகுதற்கரிய மிக்க வலியையுடைய ஆகாயத்துத் தூங்கெயிலை அழித்த நின்னுடைய முன்னுள்ளோரை நினைப்பின், ஈண்டுள்ள பகைவரைக் கொல்லுதல் நினது புகழுமல்லவே; கேடின்றி, மறம்பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து அறம்நின்று நிலைபெற்றதாதலால், முறைமை செய்தல் நினக்குப் புகழுமல்லவே; அதனால், மறம் மிக்கெழுந்திருந்த போரை வென்ற கணையமரத்தோடு மாறுபடும் தசைசெறிந்த தோளினையும், கண்ணிற்கு ஆர்ந்த கண்ணியையும், மனஞ் செருக்கிய குதிரையையுமுடைய வளவ! எவ்வாறு கூறுவேனோ யான்? உயர்ந்த எல்லை அளந்தறியப் படாத பொன்படுகின்ற நெடிய சிகரங்களையுடைய இமயமலையின்கட் சூட்டப்பட்ட காவலாகிய விற்பொறியையும், மாட்சிமைப்பட்ட தொழில் பொருந்திய நெடிய தேரையுமுடைய சேரன் அழிய அவனது அழிவில்லாத கருவூரை அழிக்கும் நினது பெருமைபொருந்திய வலிய தாளைப் பாடுங்காலத்து - எ - று. நின்னைப்பாடுங்காலென்பார், அவனது சிறப்புத்தோன்றத் தாள் பாடுங்காலென்றார்; தாளை முயற்சியெனினும் அமையும். நிறைதுலாம் புக்கோன் மருக! நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழுமன்று; தூங்கெயிலெறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின்புகழுமன்று; உறந்தை அவையத்து அறம் நின்றுநிலையிற்றாதலின், முறைமை நின் புகழுமன்று; அதனால், கலிமான்வளவ! நின் தாள் பாடுங்கால், யான் யாங்கனம் மொழிகோவெனக் கூட்டுக. அதனால், யாங்கனம் மொழிகோவென இயையும். மருகவென்புழி, ஆதலானென்பது ஆற்றலாற் போந்தபொருளெனக் கொள்க. 1கறையடியென்பதற்கு உரல்போலும் அடியென்பாருமுளர். |