156
ஒன்றுநன் குடைய பிறர்குன்ற மென்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்
நச்சிச் சென்ற விரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினுங் கிடக்கு மஃதான்று
5நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலு முடைத்தே.

திணை - அது; துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) வண்மையாதல் வலியாதல் நன்மையொன்றுடைய பிறருடைய மலைகள்; எந்நாளும் இரண்டு நன்மையையுடைத்து, பெரிய கொண்கானமென்னும் மலை; அது, தன்பாற் பரிசில் நச்சிப்போன இரப்போர் காரணமாகத் தான் அவர்க்கு முன்பு 1கடன் கொடுத்தோராலே வளைப் புண்ணப்பட்டுக் கிடப்பினுங் கிடக்கும்; அதுவன்றி, நிறுத்தற்கரிய படையையுடைய அரசரைத் திறைகொண்டு அவரை மீட்கும் தலைமையையு முடைத்து-எ - று.

இரவலர்சுட்டி யென்று பாடமோதி, இரவலர் கருதிக்கொண்டு புகழ்களைத் தொடுத்துண்ணக்கிடக்கினும் கிடக்குமெனவும் 2இரவலர் எமது எமதென்று கூறிட்டுண்ணக் கிடக்கினுங் கிடக்குமெனவும் உரைப்பினும் அமையும்.

இது கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு.


(கு - ரை.) 1. குன்றம் - பால்பகா அஃறிணைப் பெயர்.

5. "நிறையருந் தானை வெல்போர் மாந்தரன், பொறையன்" (அகநா. 142 : 4 - 5); "நிறையருந்தானை வேந்தனு நேர்ந்து" (சிலப்.25 : 178); "நிறையருந் தானையொடு ... நீங்கி" (மணி.9 : 26 - 7) (156)



1. கடன் கொடுத்தோர் - இரவலர்க்குக் கடன் கொடுத்தவர்; அவர் சூழ்வது இரவலர்பெறும் பரிசிலைத் தாம் வாங்கிக்கொண்டு செல்லுதற்கு.

2. புறநா. 135 : 16 - 7.