115
ஒருசா ரருவி யார்ப்ப வொருசார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க வுக்க தேக்கட் டேறல்
கல்லலைத் தொழுகு மன்னே பல்வேல்
5அண்ணல் யானை வேந்தர்க்
கின்னா னாகிய வினியோன் குன்றே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) ஒருபக்கம் அருவி ஆர்த்தொழுக ஒருபக்கம் பாணருடைய மண்டைகள் நிரம்ப வாக்கவேண்டி வடிக்க உக்க இனிய கள்ளாகிய தேறல் கல்லையுருட்டி யொழுகும், பலவேற்படையுடனே தலைமை பொருந்திய யானையையுமுடைய வேந்தர்க்குக் கொடியோனாகிய இனியோன்மலை; அது கழிந்தது-எ - று.

குன்று தேறல் கல்லலைத்தொழுகும்; இனி அது கழிந்ததென்று கூட்டுக.

அருவியும் அவன் உளனாயின் உளதாவதென்பது கருத்து.

மன் : கழிவின்கண் வந்தது.

குன்று தேறல் கல்லலைத்தொழுகுமென இடத்துநிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது.


(கு - ரை.) 2. மண்டை - பிச்சைப் பாத்திரம்; புறநா. 103 : 3, குறிப்புரை.

3. "அடர்பொற் சிரகத்தால் வாக்கி" (கலித். 51 : 7); வடியுறு தீந்தேறல் வாக்கு" (பு. வெ. 19). உக்க - சிந்திய.

2 - 3. "வண்டுபடு நறவிற் றண்டா மண்டையொடு" (புறநா. 261 : 2).

2 - 4. "தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன், பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச், சேறுசெய் மாரியி னளிக்குநின், சாறுபடு திருவி னனைமகி ழானே" (பதிற். 65 : 14 - 7)

5 - 6. பகைவர்க்கு இன்னான் : புறநா. 12 : 4, 59 - 6.

வேந்தர்க்கு இன்னான் என்றமையால், இரவலர்க்கு இனியோன் என்பது பெறப்பட்டது.

(115)