148
கறங்குமிசை யருவிப் பிறங்குமலை நள்ளிநின்
அசைவி னோன்றா ணசைவள னேத்தி
நாடொறு நன்கலங் களிற்றொடு கொணர்ந்து
கூடுவிளங்கு வியனகர்ப் பரிசின்முற் றளிப்பப்
5

பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே.

திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை.

கண்டீரக்கோப் பெருநள்ளியை (பி - ம். கண்டிற்கோப்பெருநற் கிள்ளியை) வன்பரணர் பாடியது.

(இ - ள்.) உச்சிக்கணின்றும் ஆலித்து (ஒலித்து) இழிதரும் அருவி யினையுடைய உயர்ந்த மலையையுடைய நள்ளி! நினது தளர்ச்சியில்லாத வலிய முயற்சியானாய நச்சப்படும் செல்வத்தை வாழ்த்தி நாடோறும் நல்ல அணிகலத்தைக் களிற்றோடே கொண்டுவந்து நெற்கூடு விளங்கும் அகலிய நகரின்கண் இருந்து சூழ்ந்திருந்த பரிசிலர்க்கு அளித்து (ஈந்து) விடுத்தலால், 1பிறர்க்கீயும் பெருமையில்லாத அரசரைப்புகழும் புகழ்ச்சியை விரும்பி அவ்வரசர் செய்யாதனவற்றைச் சொல்லி அவர் குணங்களைக் கூறுதலை அறியாததாயிற்று, எம்முடைய சிறிய செவ்விய நா-எ - று.

2பொய்கூறாமையிற் ‘செந்நா' என்றார்; 3தற்புகழ்ந்தாராகாமற் 'சிறுசெந்நா' என்றார்.
அருவியவென்பது விகாரம்.

நள்ளி! நீ பரிசின்முற்றளித்தலான், எம் சிறுசெந்நா நின்நசைவளனேத்தி மன்னரைப் புகழ்ச்சிவேண்டிக் கிளத்தல் எய்யாதாகின்றெனக் கூட்டுக.

நின் நசைவளன் ஏத்திக் கொணர்ந்து முற்றளித்தலாலெனப் பரிசிலர் மேலேற்றி உரைப்பினும் அமையும்.


(கு - ரை.) 1. புறநா. 158 : 3; "நளிமலை நாட னள்ளியும்" (சிறுபாண். 107)

2. புறநா.161 : 14 - 5; "மடியிலான் செல்வம்போன் மரனந்த" (கலித்.35) "ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா, ஊக்க முடையானுழை" (குறள், 594) ; புறநா. 24 : 29-ஆம் அடியையும் அதன் குறிப்பையும் பார்க்க; "ஊக்க வேந்த னாக்கம்போல" (பெருங். 3. 5 : 21.)

3. புறநா.171 : 10.

3-4. புறநா. 153 : 8 - 9; "இருங்கண் யானையொ டருங்கலந்துறுத்து" (பதிற். விட்டுப்போன பகுதி, 1) ; "நன்கலங் களிற்றொடு நண்ணா ரேந்தி" (அகநா. 124 : 1)

(148)


1 புறநா. 127 : 8 - 10.

2 "வாழ்தல்வேண்டிப், பொய்கூறேன் மெய்கூறுவல்", "பொய்யாச் செந்நா" (புறநா. 139 : 5 - 6, 168 : 19)

3 புறநா. 47 : 3, உரை.