40
நீயே, பிறரோம்புறு மறமன்னெயில்
ஓம்பாது கடந்தட்டவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழறைஇய
5வல்லாளனை வயவேந்தே
யாமேநின், இகழ்பாடுவோ ரெருத்தடங்கப்
புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற
இன்று கண்டாங்குக் காண்குவ மென்றும்
இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும
10ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கு நாடுகிழ வோயே.

(பி - ம்.) 1 ‘ரோம்புற்றமன்’ 6 ‘ரெருத்தமடங்க’

திணை - அது; துறை - செவியறிவுறூஉ.

அவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

(இ - ள்.) நீ, பகைவரது பாதுகாத்த மறம் நிலைபெற்ற அரண்களைப் பாதுகாவாது எதிர்நின்று அழித்து அவரைக்கொன்று அவர் மகுடமாகச் செய்யப்பட்ட பசும்பொன்னால் நினது அடிபொலிய வீரக்கழல் செய்து புனைந்த வலிய ஆண்மையையுடையை; வயவேந்தே! யாங்கள், நின்னை இழித்துரைப்போர் கழுத்திறைஞ்சப் புகழ்ந்துரைப்போர் பொலிவுதோன்ற இன்று கண்டாற்போலக் காண்போம்; எந்நாளும் இனிய மொழியோடு எளிய செவ்வியை யாகுக; பெரும! ஒருபிடி கிடக்கும் சிறிய இடம் ஏழு களிற்றியானையைப் பாதுகாக்கும் நாட்டையுடையோய் - எ - று.

நாடுகிழவோய்! இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; அதனால், நின் இகழ்பாடுவோர் எருத்தமடங்கப் புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற யாம் இன்று கண்டாங்குக் காண்குவமெனக் கூட்டுக.

வல்லாளனையென்பதனுள் ஐகாரம் முன்னிலை விளக்கிநின்றது; அசைநிலையுமாம். மதி : முன்னிலையசைச்சொல்.

‘கழறைஇய வல்லாளன்’ என்றதனாற் பகையின்மையும், ‘ஒருபிடி படியுஞ் சீறிட மெழுகளிறு புரக்கும் நாடுகிழவோய்’ என்றதனாற் பொருட்குறைவின்மையுங் கூறியவாறாயிற்று.


(கு - ரை.) 1 - 3. “புலவர் பூண்கட னாற்றிப் பகைவர், கடிமதிலெறிந்து குடுமி கொள்ளும், வென்றி” (பெரும்பாண். 450 - 52)

2. கடந்தடுதல் : புறநா. 8 : 5, 23 : 16, 80 : 9, 110 : 1; கலித். 2 : 4, 27 : 15.
9. எண்மை - எளிமை. பதம் - சமயம். ‘இன்சொல் எண்பதத்தை ஆகுமதி’ என்பது, “காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல், மீக்கூறு மன்ன னிலம்” (குறள், 386) என்பதைத் தழுவியது.

8 - 9. செவியறிவுறுத்தற்கு மேற்கோள்; தொல். செய். சூ. 114, ந.

(40)