74
குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற் றப்பார்
தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
5மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணு மளவை
ஈன்ம ரோவிவ் வுலகத் தானே.

(பி - ம்.) 2 ‘மானவிளையின்றெனவாளில்’5 ‘வயிற்றலந்தித்’ 7 ‘உண்பரோ’

திணை - பொதுவியல்; துறை - முதுமொழிக்காஞ்சி.

சேரமான் கணைக்காலிரும்பொறைசோழன்செங்கணானோடு திருப்போர்ப் (பி - ம்.போர்ப்) புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற்கோட்டத்துச்சிறையிற்கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப்பெற்றுக்கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் 1 துஞ்சியபாட்டு.

(இ - ள்.) பிள்ளை இறந்துபிறப்பினும்தசைத்தடியாகிய மணை பிறப்பினும் அவற்றையும் ஆளல்லவென்றுகருதாது வாளோக்குதலில் தவறார் (பி-ம். தவிரார்)அரசராயிருக்க, பகைவர் வாளாற் படாது, சங்கிலியாற்பிணிக்கப்பட்ட நாய்போலப் பிணித்துத் துன்பத்தைச்செய்து இருத்திய கேளல்லாத கேளிருடைய உபகாரத்தான்வந்த தண்ணீரை இரந்துண்ணக் கடவே மல்லேமென்னும்மனவலியின்றி வயிற்றின்கட் டீயையாற்ற வேண்டித்தாமே இரந்துண்ணும் அளவினையுடையாரை அவ்வரசர்பெறுவார்களோஇவ்வுலகத்தின்கண்-எ - று.
அளவையுடையாரை அளவையென்றார்.

இதன் கருத்து: சாக்குழவியும் ஊன்பிண்டமுமெனஇவற்றின் மாத்திரையும் பெற்றிலேமெனப் பிறர்மேல்வைத்துக் கூறியவாறு.

கேளல்கேளிரென்றது சிறைக்கோட்டங்காவலரை.

அன்றி, இவன் ஆண்மையுடையனல்லனென்றுவாளாற் கொல்லாராய்த் தொடர்ப்படுஞமலிபோலஇடர்ப்படுத்திருத்திய கேளல்கேளிர் வேளாண் சிறுபதத்தைமதுகையின்றி வயிற்றுத்தீத் தணிக்கவேண்டித்தாம்இரந்துண்ணுமளவாகக் குழவி செத்துப்பிறப்பினும் ஊன்தடிபிறப்பினும் இவ்வுலகத்து மகப்பெறுவாருளரோவெனஉரைப்பினும் அமையும்.

அரசர்க்கு மானத்தின்மிக்கஅறனும் பொருளும் இன்பமுமில்லையென்று கூறினமையின்,இது முதுமொழிக்காஞ்சியாயிற்று.


(கு - ரை.) 1-2. ஊன்றடி - ஊன்பிண்டம்.அரசர்களில், போர்க்களத்து வீழ்ந்தோரே துறக்கம்பெறுவர்;

அங்ஙனமின்றி நோயால் இறந்தோருடம்பைத்தருப்பையிற் கிடத்தி வாளாற் போழ்ந்து, ‘போரில்மாண்டோரடையும் கதியை இவர் அடைக’ எனக்கடவுளை வேண்டிஅவ்வுடம்பை அடக்குதல் விதியென்பது ஈண்டறியற்பாலது;இதனை “திண்பிணி முரசம்” (புறநா. 93), “தருப்பையிற்கிடத்தி

....... நாணுத்தகவுடைத்து” (மணி. 23: 13 - 6), ‘மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்துவீழ்ந்தோரே துறக்கம் பெறுவர்’ (தொல். அகத்திணை.சூ. 44 ந.), (கம்ப. மந்திர. 20, 28) என்பவற்றாலும்அறிக. அன்று: பலவின்பாற்பொருளிலும் வரும்.

3-7, “மான வருங்கல நீக்கி யிரவென்னு,மீன விளிவினால் வாழ்வேன்ம-னீனத்தால், ஊட்டியக்கண்ணு முறுதிசேர்ந் திவ்வுடம்பு, நீட்டித்து நிற்குமெனின்” (நாலடி. 40); “மறனிழுக்கா, மானமுடைதரசு”,“மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை,பீடழியவந்த விடத்து”, “மயிர்நீப்பின்வாழாக் கவரிமா வன்னார், உயிர்நீப்பர் மானம்வரின்”, “இளிவரின் வாழாத மான முடையார்,ஒளிதொழுதேத்து முலகு” (குறள், 384, 968 - 70); ‘மானமழிந்த பின் வாழாமை முன்னினிதே” (இனியது.14) என்பவை இச்செய்யுளின் பொருளை விளக்குகின்றன.

‘தொடர்ப்படு.......உலகத்தானே :இது தன்மாட்டு வருத்தத்தான் இழிப்புப் பிறந்தது’(தொல். மெய்ப்பாடு. சூ. 6, இளம்.) பதம் -உணவு. அளவை: பண்பாகு பெயர்.

7. ஈன்மரோ - பெறுவார்களோ; மகரம்எதிர்காலம் உணர்த்திற்று.

மு. காஞ்சித்திணையுள், தாமேயேங்கியதாங்கரும் பையுள் என்னும் துறைக்கு மேற்கோள் (தொல்.புறத்திணை. சூ. 19, இளம்); ‘தாமே யேங்கிய வென்பதற்குச்சிறைப்பட்டார் தாமே தனித்திருந்தவென்று கூறி, குழவி.............உலகத்தானேயென்னும் புறப்பாட்டைக் காட்டுவாருமுளர்’ (தொல்.புறத்திணை. சூ. 24, ந.)

(74)


1. துஞ்சிய என்பதற்கு மூர்ச்சித்தவென்று பொருள்கொள்ளவேண்டும் போலும்.