(கு - ரை.) 1. மிடல் - வலி. 2. வடுகர் - வடுகவீரர்; இவர் வடநாட்டினருள் ஒருவகையார்; "கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்" (நற். 212 : 5), "குல்லைக் கண்ணி வடுகர்" (குறுந். 11 : 5), "கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்", "வானிணப் புகவின் வடுகர்", "முரண்மிகு வடுகர்", "தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்", "வம்ப வடுகர் பைந்தலை சவட்டி", " கதநாய் வடுகர்" (அகநா. 107 : 11, 213 : 8, 281 : 8, 295 : 15, 375 : 14, 381 : 7). ஓட்டிய - ஓட்ட. 1 - 2. "பரதவர் - தென்றிசைக்கட் குறுநில மன்னர்; அது, ‘தென்பரதவர்...................வாளோட்டிய’ என்னும் புறப்பாட்டானும் உணர்க" (மதுரைக். 144, ந.) 3. தொடை அமை கண்ணி - கட்டுதலமைந்த தலைமாலை. வேலுக்கு மாலைசூட்டல் மரபு; புறநா. 332 : 1 - 5. 4. கடைஇய - செலுத்திய. வடிம்பு - இங்கே காலின் விளிம்பு; "மாவுடற்றிய வடிம்பு" (பதிற். 70 : 2) 5. கோயில் - அரண்மனை. 6. சுதை - சுண்ணச்சாந்து; "வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து" (மணி. 6 : 43); "திங்களுங் கரிதென வெண்மை தீட்டிய, சங்கவெண் சுதையுடைத் தவள மாளிகை" (கம்ப.நகரப். 133); "வெண்சுதை தீற்றிய மாடம்" (நைடதம், நகர. 5) 7. பனிக்கயம் - குளிர்ந்த நீரையுடைய குளம் ; நகருக்குக் குளம் உவமை ; "கயங்கண் டன்ன வயங்குடை நகரத்து" (மதுரைக். 484) ; "நிழற்கயத் தன்ன நீணகர்" (அகநா. 105 : 7) 8. அரிக்கூடுமாக்கிணை - அரித்தெழும் ஓசையையுடைய பெரிய தடாரிப்பறை ; "அரிக்கூ டின்னியம்" (மதுரைக். 612) 9. வஞ்சி - பகைமேற் செலவு ; புறநா. 15 : 24, 33 : 10 11. அருங்கல வெறுக்கை - பெறுதற்கரிய ஆபரணமும் செல்வமும் ;புறநா. 146 : 1. 13. இலம்பாடு - இல்லாமை உண்டாதல்; ஒக்கல் - சுற்றம் ; "இலம்படு காலை யாயினும், புலம்பல் போயின்று பூத்தவென் கடும்பே", "இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற", "இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்" (புறநா. 380 : 15 - 6, 390 : 19, 394 : 16) 14 - 5. விரலிற் செறித்தற்குரிய மோதிரமுதலியவற்றைக் காதிலும், காதிற் செறித்தற்குரிய குழை முதலியவற்றை விரலிலும் செறித்துக்கொண்டாரென்றபடி. 16. அரை - இடை. யாக்குநர் - கட்டுகின்றவர். மிடறு - கழுத்து. 18. வடசொற் சிதைந்து பொருத்தமுடையனவாகச் சான்றோர் செய்யுளில் வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; தொல் எச்ச. சூ. 6, ந. ; இ. வி. சூ. 175, உரை. 19. அரக்கன் - இராவணன். ஞான்றை - சமயம் ; ஐ : சாரியை. 20. மதரணி - கதிர்த்த ஆபரணங்கள். 20 - 21. குரங்கின் செம்முகப் பெருங்கிளை - செவ்விய முகத்தையுடைய பெரிய குரங்கின் குழு ; சுக்கிரீவனைச் சேர்ந்த குரங்குகள் ; "செம்முக மந்தி" (நற்.151 : 8) ; "துய்த்தலைச், செம்முக மந்தியாடும்" (அகநா.241 : 14 - 5). இழை - ஆபரணம் ; இழைக்கப்படுதலான் வந்த பெயர். 22. அறாஅ - நீங்காத. பெற்றிகும் - பெற்றோம். 24. அரும்படரெவ்வம் - நினைவாலுண்டாகும் நோயின் வருத்தம் ; புறநா. 145 : 10. மு. பாடாண்டிணைத் துறைகளுள், ‘பெற்ற பின்னரும் பெருவளனேத்தி, நடைவயிற் றோன்றிய விருவகை விடை’ (தொல்.புறத்திணை. சூ. 30, இளம்.; சூ. 36, ந.) என்பதற்கு இது மேற்கோள். (378)
|