(கு - ரை.) 1. செஞ்ஞாயிறு : செம்மை, இனச்சுட்டில்லாப் பண்படை. 4. ஆகாயமென்பது முதற்குறைந்தமைக்கு மேற்கோள்; நன்.சூ. 268, மயிலை. 1-6. புறநா.20 : 1 - 5; “நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின், அளப்பரி யையே” (பதிற்.14 : 1 - 2) 8-9. “காய்ந்தெறி கடுங்கற் றன்னைக் கவுட்கொண்ட களிறுபோல, ஆய்ந்தறி வுடைய ராகி யருளொடு வெகுளி மாற்றி, வேந்தர் தாம் விழைப வெல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய்” (சீவக.2910) என்பதும், ‘களிறுகவு ளடுத்த வெறிகற் போல, ஒளித்த துப்பினை என்றார் பிறரும்’ என இவ்வடிகளை நச்சினார்க்கினியர்அச்செய்யுளின் உரையில் மேற்கோள் காட்டியிருத்தலும், “வேற்றுவ னெறிந்த கல்லைக், காந்திய கந்ததாகக் கவுட்கொண்ட களிறு போலச், சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து, நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்தனானான்” (சூளா.சீயவதை. 94) என்பதும் இங்கே அறியத்தக்கவை. 11. மீ முன் வலிமிக்கதற்கு மேற்கோள்; நன்.சூ. 177, மயிலை. “அறிவறிவாகாச் செறிவினையாகி.......ஒளித்த துப்பினை” எனத் தலைவன் இயல்பை எடுத்துக் கூறினமையால், இச்செய்யுள் இயன்மொழியாயிற்று. (30)
|