(பி - ம்.) 1 ‘மிலைத்தோனு மல்லன்’ 7 ‘செய்கை’ திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி. சோழன் நலங்கிள்ளி உறையூர்முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் கோவூர்கிழார் பாடியது. (இ - ள்.) பெரிய பனையினது வெளிய தோட்டைச் சூடினோனல்லன்; கரிய கோட்டினையுடைய வேம்பினது தாரையுடையோனல்லன்; நின்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது; நின்னுடன் பொருவானுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது; ஆதலால், நும்முள், ஒருவீர் தோற்பினும் தோற்பது நுங்குடியன்றோ? இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலால், நுங்குடிக்குத்தக்கதொன்றன்று நுமது செய்கை; கொடியாற் பொலிந்த தேரையுடைய நும்மைப்போலும் வேந்தர்க்கு உடம்பு பூரிக்கும் உவகையைச் செய்யும், இம்மாறுபாடு; ஆதலான், இது தவிர்தலே நுமக்குத் தக்கது-எ - று. நினகண்ணியுமென்பது, நின்னகண்ணியுமென விகாரமாயிற்று. அதனாலென்பதனை ஒழித்தும் பாடமோதுப. இது சந்துசெய்தலால் துணைவஞ்சியாயிற்று. |