366
விழுக்கடிப் பறைந்த முழுக்குரன் முரசம்
ஒழுக்குடை மருங்கி னொருமொழித் தாக
அரவெறி யுருமி னுரறுபு சிலைப்ப
ஒருதா மாகிய பெருமை யோரும்
5தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே
அதனால், அறவோன் மகனே மறவோர் செம்மால்
..................உரைப்பக் கேண்மதி
நின்னூற்றம் பிறரறியாது
10பிறர்கூறிய மொழிதெரியா
ஞாயிற் றெல்லை யாள்வினைக் குதவி
இரவி னெல்லை வருவது நாடி
உரை............
உழவொழி பெரும்பக டழிதின் றாங்குச்
15செங்கண் மகளிரொடு சிறுதுனி யளைஇ
அங்கட் டேற லாய்கலத் துகுப்பக்
கெடலருந் திருவ....................
மடைவேண்டுநர்க் கிடையருகா
தவிழ்வேண்டுநர்க் கிடையருளி
20விடைவீழ்த்துச் சூடுகிழிப்ப
நீர்நிலை பெருத்த வார்மண லடைகரைக்
காவு தோறும்.............
மடங்க லுண்மை மாயமோ வன்றே.

(பி - ம்.) 1 ‘விழுக்கடிபபடைந்த’ 3 ‘னுரறுபரிலைபப’ 16 ‘லாயகளதது’ 17 ‘கெடிலருநதிவே’ 18-9‘வேண்டுநாகடையருதா திவிழ்’

திணையும் துறையும் அவை.

தருமபுத்திரனைக் கோதமனார்.


(கு - ரை.) 1. கடிப்பு - குறுந்தடி. 3. உரறுபு சிலைப்ப - மிகமுழங்க.

1 - 3. மேக முழக்கிற்கு முரசு உவமை ; புறநா. 58 : 6 - 7, குறிப்புரை. கலித். 45 : 3 - 5, குறுந். 270 : 3; நற். 197 :10.

4. புறநா. 18 : 4, 363 - 2 - 3.

5. "தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே" (புறநா. 165 : 1-2)

6. செம்மால் - செம்மலே ; தலைவனே.

9. ஊற்றம் - வலி. 10. தெரியா - தெரிந்து.

11. பகற்காலத்தை முயற்சிக்கு உதவி.

12. வருவது - பின்வருங் காரியத்தை.

14. உழுத பெரிய பகடு வைக்கோலைத் தின்றாற்போல; "உழுத நோன்பக டழிதின் றாங்கு" (புறநா. 125 : 7)

15. அளைஇ - கலந்து. 16. கட்டேறல் - கள்ளின் தெளிவை.

18. இடை - சமயம். அருகாது - குறையாமல்.

19. அவிழ் - சோற்றுப்பருக்கை.

20. விடை - ஆட்டுக்கிடாய் ; புறநா. 364 : 4. சூடு - சூட்டிறைச்சி.

23. மடங்கல் - யமன்; மு. புறநா. 363 : 9.

(366)