3
உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற
ஏம முரச மிழுமென முழங்க
நேமி யுய்த்த நேஎ நெஞ்சிற்
5றவிரா வீகைக் கவுரியர் மருக
செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ
பொன்னோடைப் புகரணிநுதற்
றுன்னருந்திறற் கமழ்கடாஅத்
தெயிறுபடை யாக வெயிற்கத விடாஅக்
10கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக்
கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி
நிலம்பெயரினு நின்சொற்பெயரல்
15பொலங்கழற்காற் புலர்சாந்தின்
விலங்ககன்ற வியன்மார்ப
ஊரில்ல வுயவரிய
நீரில்ல நீளிடைய
பார்வ லிருக்கைக் கவின்கண் ணோக்கிற்
20செந்தொடை பிழையா வன்க ணாடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்னசை வேட்கையி னிரவலர் வருவரது
25முன்ன முகத்தி னுணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.

(பி - ம்.) 7 “பொன்னினோடை’12 ‘லசாவாக்’ 24 ‘வருவதை’

திணையும் துறையும் அவை.

பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலையார் பாடியது.

(இ - ள்.) உவாநாளின் மதியினதுவடிவுபோலும் வடிவினையுடைய உயர்ந்த வெண்கொற்றக்குடைநிலைபெற்ற கடலெல்லைக்கண் நிலத்தை நிழற் செய்ய,காவலாகிய வீரமுரசம் இழுமென முழங்கும் ஓசையையுடைத்தாய்முழங்க, சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்ஒழியாத வண்மையையுமுடைய பாண்டியர் மரபினுள்ளாய்!குற்றமற்ற கற்பினையுடைய சேயிழைக்குத் தலைவ!பொன்னானியன்ற பட்டத்தையுடைய புகரணிந்த மத்தகத்தினையும்,அணுகுதற்கரிய வலியையும், மணநாறும் மத்தத்தினையுமுடைய,கொம்பு படைக்கலமாகக் கொண்டு பகைவர் மதிலின்கட்கதவைக் குத்திக் கயிற்றாற் பிணித்தலைச்செய்தகவிழ்ந்த மணியையணிந்த பக்கத்தையும் பெருங்கையையுமுடையயானையினது பெரிய கழுத்திடத்தே யிருந்து பரிகாரமில்லாதகூற்றத்தினது பொறுத்தற்கரிய கொலைத்தொழிலுக்குஇளையாத வலிய கையின் கண்ணே ஒள்ளிய வாளினையுடையபெரும்பெயர்வழுதி! நிலம் பிறழினும் நினது ஆணையாகியசொற் பிறழாதொழியல்வேண்டும்; பொன்னாற் செய்யப்பட்டவீரக்கழல் புனைந்தகாலினையும் பூசிப்புலர்ந்த சந்தனத்தையுடைத்தாகியகுறுக்ககன்ற பரந்த மார்பினையு முடையோய்! ஊரில்லாதனவும்,பொறுத்தற்கரிய உயங்குதலையுடையனவும், நீரில்லாதனவும்,நீண்ட வழியனவுமாகிய, வலம்பலரை நலியச் சேய்மைக்கண்ணே பார்த்திருக்கும் இருப்பினையும், கையாற்கவிக்கப்பட்டகண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையையும், செவ்வியதொடை பிழையாத தறுகண்மையையுமுடைய மறவர்தாம் அம்பைவிடுதலாற் பட்டோரது உடன்மூடிய புதியகற்குவையின்மேலேதிருந்திய சிறகினையும் வளைந்த வாயினையுமுடையபருந்திருந்து வருந்தும் உன்னமரத்தினையுடையவாகியஅணுகுதற்கரிய கவர்த்த வழியின்கண்ணே நின்பால்நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர்; அங்ஙனம்வருவது, அவர் மனக்குறிப்பை அவர் முகத்தானறிந்துஅவருடைய வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான் -எ - று.

நுதலையும் திறலையும் கடாத்தையும்மருங்கையும் பெருங்கையையும் உடைய யானைப்பிடர்த்தலையிருந்துஎயிறுபடையாக எயிற்கதவிடாக் கூற்றத்து அருந்தொழில்சாயாப்பெரும்பெயர்வழுதியென மாறிக் கூட்டுக: காலாலடுதல்(பி-ம். காலிலிடுதல்) கையாலூக்குதலன்றி எயிறுபடையாக எயிற்கதவிடக்கை விடாத பெருங்கையானையெனஇயைத் துரைப்பினுமமையும்; எயிற்கதவிடாஅக் கயிறுபிணிக்கொண்டவெனஇயைத்துரைப்பாருமுளர்.

ஊரில்ல உயவரிய நீரில்ல நீளிடையவாகிய உன்னமரத்தகவலையெனவும், பருந்திருந்துயவும்துன்னருங்கவலையெனவும் இயையும்.

மருக, கணவ, வழுதி, மார்ப, இரவலர்வருவர்; அஃது அவர் இன்மை தீர்த்தல்வன்மையான்;அதனால், நின்சொற் பெயராதொழியல் வேண்டுமெனக்கூட்டி வினைமுடிவுசெய்க.

வாழ்த்தியலாதல் விளங்க, வேண்டுமெனஒரு சொல் தந்துரைக்கப்பட்டது.


(கு - ரை.) 1. தொல், செய்.சூ. 14, 54, 94, பேர்., ந. ; தொல். செய். சூ. 92, ந.மேற்.

3. “ஏம முரச மிழுமெனச் சிலைப்ப”(பெருங். 2, 5 : 18)

1 - 5. கலித். 99 : 8 - 9.

6. பெண்பாலாரை ஆண்பாலாரோடு சேர்த்துவாழ்த்துதல் மரபாதலின் இங்ஙனங் கூறினார்; “ஒடுங்கீரோதிக் கொடுங்குழை கணவ”, “ஆன்றோள் கணவ”,“பாவை யன்ன நல்லோள் கணவன்”, “புரையோள்கணவ” (பதிற். 14, 55, 61, 70); “மங்கையர் கணவ”(முருகு. 264); “மலர்போன் மழைக்கண் மங்கையர்கணவன்” (மலைபடு, 58); “மக்களுட் பெண்பாலைப்பாடுதல் சிறப்பன்மையின், ‘செயிர்தீர்........கணவ’என்றாற்போலச் சிறுபான்மை ஆண்மக்களோடு படுத்துப்பாடுப”(தொல். புறத்திணை. சூ. 26. ந.)

8. “துன்னருங் கடாஅம் போல” (புறநா.94 : 4) கடாம் மணமுள்ளது; “மிஞிறார்க்குங் கமழ்கடாத்து”,“வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்து” (புறநா.22 : 6, 93 : 12; கலித், 21 : 2); “கடுஞ்சினத்த கமழ்கடாஅத்து” (மதுரைக். 44); தக்க.3, வி - கு.; கம்ப.நகரப். 58.

9. புறநா. 4 : 10 - 11. இடாஅ - குத்தி;புறநா. 303 : 9; கலித். 24 : 10.

9 - 11. கலித். 135 : 2 - 4.

7 - 11. “பொன்னோடை......யானை எனஅடுக்கி வருவனவும் ஒட்டி
ஒரு சொல்லாகாமையுமுணர்க (தொல். எச்ச. சூ. 16, ந.)

12. “மருந்தில் கணிச்சி” (புறநா.42 : 22); நின்ற கருமத்ததல்லாத வற்று” (அறநெறிச்.111); “மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்”(தொல். புறத்திணை. சூ. 24); “மாற்றே னெனவந்தகாலனை” (திருச்சிற். 150); “மாற்றருங் கூற்றம்”(மணி. 25 : 49)

7 - 12. ‘எயிறுபடையாக.......சாயா எனமாட்டாய் ஒட்டி நின்றது, ‘கயிறு பிணிக்கொண்ட’என்பதனோடும் ஒட்டினாற் போலநின்று ஒற்றடுத்தது,இன்னோசை பெறுதற்கு” (தொல். புணர். சூ. 9, ந);“பொன்னோடை.......சாயாவென்றாற்போலவருவனவெல்லாம் அணுகி வந்த மாட்டென்னுமுறுப்பு” (தொல்.எச்ச. சூ. 13, ந.)

10 - 13. “மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்தலின்னா” (இன்னா. 14)

14. “நிலம்புடை பெயர்வ தாயினும்”(புறநா. 34 : 5); “நிலந்திறம் பெயருங் காலையாயினும், கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே”(பதிற். 63 : 6 - 7); “காதலர் நிலம்புடை பெயர்வதாயினுங் கூறிய, சொற்புடை பெயர்தலோ விலரே” (நற்.289); “இம்மூ வுலகி னிருள் கடியு மாய்கதிர்போல்,அம்மூன்று முற்ற வறிதலாற் - றம்மின், உறழா மயங்கியுறழினு மென்றும், பிறழா பெரியோர்வாய்ச் சொல்”(பு - வெ. 167)

16. இவ்வடி ஒருபொருட்பன்மொழிக்குமேற்கோள்’ நன். மயிலை. சூ. 397.

19. பார்வல் - பார்த்தல்; “பார்வற்பாசறை” (பதிற். 84 - 15); “பருந்துபறக் கல்லாப்பார்வற் பாசறை” (மதுரைக். 231)

20. “சிலைவிற்கானவன் செந்தொடைவெரீஇ” (குறுந். 285 : 2); “வாங்கு தொடை பிழையாவன்க ணாடவர்” (அகநா. 175 : 2)

19 - 20. ‘அற்றம்பார்த் தல்குங்கடுங்கண் மறவர்” (கலித். 4 : 3)

21. “வெண்ணுனை யம்பின் விசையிடவீழ்ந்தோர், எண்ணுவரம் பறியா வுவலிடு பதுக்கை”,“வில்லிட வீழ்ந்தோர் பதுக்கை”, “வடிநவிலம்பினேவ லாடவர், ஆளழித் துயர்த்த வஞ்சுவரு பதுக்கை”,“கொடுவிற்
கானவர் கணையிடத் தொலைந்தோர், படுகளத் துயர்த்தமயிர்த்தலைப் பதுக்கை” (அகநா. 109, 157, 215,231)

23. உன்னம் - போர் செய்தற்குச் செல்வோர்நிமித்தம் பார்த்தற்குரிய ஒருவகை மரம்; புன்காலுன்னஞ் சாய” (பதிற். 40 : 17) என்பதும், ‘தன்னொடுபொரக்கருதுவார் நிமித்தம் பார்த்தவழி அவர்க்குவென்றியின்மையிற் கரிந்து காட்ட’ என்னும் அதன்உரையும், “புன்காலுன்னத்துப் பகைவன்” (பதிற்.61 : 6) என்பதும், “துன்னருந்தானைத் தொடுகழலான்றுப்பெதிர்ந்து, முன்னர் வணங்கார் முரண்மருங்க மன்னரு,மீடெலாந் தாங்கி யிகலவிந்தார் நீயுநின், கோடெலாமுன்னங்குழை” (பு - வெ. 243) என்பதும் இங்கே அறியற்பாலன.உன்னம் - இலவமரமென்பது மலைநாட்டு வழக்கென்பர்.

20 - 23. “இலைமான் பகழிச் சிலைமாணிரீஇய, அன்பி லாடவ ரலைத் தலிற் பலருடன், வம்பலர்தொலைந்த வருஞ்சுரக் கவலை, அழல்போற் செவிய சேவலாட்டி, நிழலொடு கதிக்கு நிணம்புரி முதுநரி, பச்சூன்கொள்ள மாந்திவெய் துற்றுத், தேர்திகழ் வறும்புலந்துழைஇ நீர் நயந்து, பதுக்கை நீழ லொதுக்கிடம் பெறாஅ,வஞ்சுவரு கவலை” (நற், 352)

24. “நீர்நிசை வேட்கையின்”(மணி. 23 : 112); “பெறனசை வேட்கையி னின்குறிவாய்ப்ப” (கலித். 93 : 17)

25. “ஒளிப்பினு முள்ளம், படர்ந்ததேகூறு முகம்”, “நோக்கி, முகனறிவார் முன்ன மறிப”(பழ. 41, 30); “முன்ன, முகம்போல முன்னுரைப்ப தில்”(நான்மணிக். 50); “அடுத்தது காட்டும் பளிங்குபோனெஞ்சங், கடுத்தது காட்டு முகம்”, “முகத்தின்முதுக்குறைந்த துண்டோ வுவப்பினும், காயினுந் தான்முந்துறும்” (குறள், 706 - 7)

24 - 6. “சுரந்தவான் பொழிந்தற்றாச்சூழநின் றியாவர்க்கும், இரந்தது நசைவாட்டா யென்பதுகெடாதோதான்” (கலித். 100 : 11 - 2)

“நிலம்பெயரினு நின்சொற் பெயரல்”(14) என்றதனால், இது செவியறிவுறூஉ வென்னும் துறையாயிற்று.

11 - ஆம் அடியாற் புலவரதுபெயர்க்காரணமும்,13 - ஆம் அடியாற்
பாட்டுடைத் தலைவனது பெயரும் விளங்கியவாறறிக. (3)