24
நெல்லரியு மிருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயின்முனையிற்
றெண்கடற்றிரை மிசைப்பாயுந்து
திண்டிமில் வன்பரதவர்
5வெப்புடைய மட்டுண்டு
தண்குரவைச் சீர்தூங்குந்து
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
10வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்
இரும்பனையின் குரும்பைநீரும்
பூங்கரும்பின் றீஞ்சாறும்
ஓங்குமணற் குவவுத்தாழைத்
15தீநீரோ டுடன்விராஅய்
முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயுந்
தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய
ஓம்பா வீகை மாவே ளெவ்வி
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
20கயலார் நாரை போர்விற் சேக்கும்
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தாறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
நின்று நிலைஇயர்நின் னாண்மீ னில்லாது
25படாஅச் செலீயர்நின் பகைவர் மீனே
நின்னொடு, தொன்று மூத்த வுயிரினு முயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்னநின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
30இரவன் மாக்க ளீகை நுவல
ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி பெரும வாங்கது
வல்லுநர் வாழ்ந்தோ ரென்ப தொல்லிசை
35மலர்தலை யுலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே.

(பி - ம்.) 7 ‘திவலையிற்’ 9 ‘தழூஉந்து’ 16 ‘பாயுந்து’ 20 ‘போரிற்’

திணையும் - பொதுவியல்; துறை - பொருண்மொழிக்காஞ்சி.

அவனை மாங்குடிகிழார் (பி - ம். மாங்குடிமருதனார்) பாடியது.

(இ - ள்.) நெல்லையரியும் பெரிய உழவர் செஞ்ஞாயிற்றினது வெயிலை வெறுப்பின் தெளிந்த கடற்றிரையின்மேலே பாயும் திண்ணிய திமிலையுடைய வலிய நுளையர் வெம்மையையுடைய மதுவையுண்டு மெல்லிய குரவைக் கூத்திற்கு ஏற்ற தாளத்தையாடும் கடற்றுவலையாலே தழைத்த தேன்பரந்த புன்னையினது மெல்லிய பூங்கொத்தாற் செய்யப்பட்ட மாலையைச் சூடிய ஆடவர் விளங்கிய வளையையுடைய மகளிர்க்கு முதற்கைகொடுக்கும் வண்டுமொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறிய கானலிடத்துக் கடன்முள்ளிப்பூவாற் செய்யப்பட்ட மாலையையுடைய விளங்கிய வளையையணிந்த மகளிர் பெரிய பனையினது நுங்கின் நீரும் பொலிவினையுடைய கரும்பினது இனியசாறும் உயர்ந்தமணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே கூடக் கலந்து இம்மூன்று நீரையும் உண்டு மூன்று நீரையுடைய கடற்கண்ணே பாயும் பரிக்கவொண்ணாத பலமக்களும் வாழ்தலையுடைய நல்ல ஊர்கள் பொருந்திய பொருளைப் பாதுகாவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது நீர்வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக்கூற்றத்துடனே வயலிடத்துக் கயலைமேயும் நாரை போரின்கண்ணே உறங்கும் பொன்னணிந்த யானையையுடைய பழைய முதிர்ந்த வேளிரது திரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக் கூற்றத்தைக்கொண்ட வெற்றிபொருந்திய உயர்ந்த குடையினையும் கொடியாற்பொலிந்த தேரினையும் உடைய செழிய! நின்றுநிலைப்பதாக நினது நாளாகிய மீன்; நில்லாது பட்டுப் போவதாக நின்பகைவருடைய நாளாகிய மீன்; நின்னொடு பழைதாய் முதிர்ந்த உயிரினும் உயிருடனே நின்று முதிர்ந்த உடம்பு போன்ற நினது வெற்றிகுடியோடு மூத்த சீரிய குடியின்கட் சிறந்த வாட்போராலே வாழ்வார் நினது முயற்சிவலியை வாழ்த்த இரக்கும் பரிசிலர் நின்வண்மையைச் சொல்ல ஒள்ளிய வளையையுடைய மகளிர் பொற் கலத்தின்கண் ஏந்திய குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய மதுவை மடுப்ப அதனையுண்டு மகிழ்ச்சிமிக்கு அப்படி இனிதாக நடப்பாயாக; பெரும! அவ்வொழுக்கம்வல்லவரை வாழ்ந்தோரென்று சொல்லுவர் அறிவுடையோர்; பழைய புகழ்தான், பரந்த இடத்தையுடைய உலகத்தின்கண்ணே பிறந்து பரக்க ஒழுகாது நின்று மாய்ந்தோர் பலர்; அவர் வாழ்ந்தோரெனப்படாராதலான், எ-று.

மேல் எண்ணப்பட்ட பெயரெச்சமூன்றும் மிழலையென்னும் பெயர் கொண்டன; அவை உம் உந்தாய் நின்றன.
முந்நீர்ப்பாயும் நல்லூரென்க.

உயிரினும் சிறந்த, ஆக்கையன்ன வாளின்வாழ்நரெனக் கூட்டி உயிர்க்கு யாக்கை போலவும் யாக்கைக்கு உயிர்போலவும் இன்றியமையாது இரண்டுமாயிருக்கின்ற வாளின் வாழ்நரென்க.

நின்குடியொடுமூத்த நின்யாக்கையன்ன விழுத்திணைக்கண் உளராய் நின்னுயிரினுஞ்சிறந்த வாளின்வாழ்நரெனக் கூட்டினும் அமையும்.

செழிய! நின் நாண்மீன் நின்றுநிலைஇயர்; நின்பகைவர் மீன் படாஅச்செலீஇயர்; உலகத்துத் தோன்றி இசைசெலச் செல்லாது விளிந்தோர் பலர்; அவர் வாழ்ந்தோரெனப்படார்; ஆதலால், பெரும! வாழ்த்த நுவல மடுப்ப மகிழ்சிறந்து இனிது ஒழுகு; அது வல்லுநரை வாழ்ந்தோரென்பவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
தாங்காவிளையுளென்பதூஉம் பாடம்.

ஆங்கது : ஒருசொல்; ஆங்கு அசைநிலையுமாம்.

இனி, தொல்லிசையையுடைய உலகத்துத் தோன்றி மேற்சொல்லப்பட்ட நன்மைகள் தமக்குப் பரக்க ஒழுகாது நின்று விளிந்தோர் பலரென உரைப்பாரும் உளர்.

இது, நிலையாமை கூறி, இனிது ஒழுகென்றமையாற் பொருண் மொழிக்காஞ்சி.


(கு - ரை.) 1. புறநா. 209 : 2; தொழுவர் - தொழில்செய்வார்; மதுரைக். 89.

3. உம்மீறு உந்தாய்த் திரிந்ததென்பதற்கு, ‘பாயுந்து’ என்பது மேற்கோள்; இ. வி.சூ. 244, உரை.

1-3. “நெல்லரியும்.....பாயுந்து; இதிற் ‘பாயும்’ எனற்பாலது ‘பாயுந்து’ என வந்தது” (தொல். இடை. சூ. 7, தெய்வச்.) உம் உந்தாயிற்றென்பதற்கு மேற்கோள்; நன். மயிலை.சூ. 340,; நன். வி.சூ. 341.

5. புறநா.29 : 15.

4-6. குரவை : புறநா.129 : 1 - 3; கலித்.106 : 32 - 3; அகநா. 20:7.

3-6. ‘பாயுந்து’, ‘தூங்குந்து’ என வருவன பெயரெச்சவினைத் திரிசொல் என்பர்; தொல். எச்ச. சூ. 61, ந.

4. திமில் - தோணி; பரதவர்-நுளையவர்; இவர் கடற்கரையில் வாழும் ஒருவகைச் சாதியார்; திமிலர் என்றும் கூறப்படுவர்.

7. “புன்னை, உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர்” (குறுந்.5 : 2 - 3.) ‘கலித்தல்’ தழைப்பென்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 93, தெய்வச்.

9. “எல்லென்பது உரிச்சொனீர்மைத்தாயினும், ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையான் இடைச்சொல்லென்று கோடும்; ‘எல்வளை’ என எல்லென்பது இலங்குதற்கண் வந்தவாறு” (தொல்.இடை. சூ. 21, சே.) தலைக்கை : கலித்.73 : 16, ந.

8-9. “மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன், முழவுறழ் தடக்கையி னியல வேந்தி, மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து” (முருகு.214. 6.)

11. “மணிப்பூ முண்டகத்து மணன்மலி கானற், பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப” (மதுரைக்96 - 6); “அணிமலர் முண்டகத்தாய்பூங் கோதை, மணிமரு ளைம்பால் வண்டுபடத் தைஇ” (நற்.125 : 2 - 3); “முண்டகக் கோதை நனையத், தெண்டிரைப் பௌவம் பாய்ந்து நின் றோளே” (ஐங்குறு.121). முண்டகக் கோதை: (தொல். புள்ளி. சூ. 1, ந. மேற்.)

1-17. “நெல்லரியும்.....கெழீஇய என்ற வழி உம் உந்தாயிற்று” (தொல்.இடை. சூ. 43, தெய்வச்.); பெயரெச்ச வினை அடுக்கி வந்து ஒரு பெயர் கொண்டதற்கு மேற்கோள்; நன். மயிலை. சூ. 354.

1-19. “நெல்லரியுமிருந்தொழுவர் என்னும் புறத்தொகைப் பாட்டினுள் ‘தெண்கடற்றிரை மிசைப்பாயுந்து’ எனவும், ‘தண்குரவைச் சீர்தூங்குந்து’ எனவும், ‘எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து’ எனவும், ‘முந்நீர்ப்பாயும்’ எனவும் செய்யுமென்னும் பெயரெச்சம் அடுக்கி, ‘ஓம்பா வீகை மாவே ளெவ்வி, புனலம் புதவின் மிழலை’ என்னும் ஒருபொருள் கொண்டு முடிந்தவாறு கண்டுகொள்க; ஆங்குத் ‘தாங்கா விளையு ணல்லூர் கெழீஇய’ என்னும் பெயரெச்சம் இடைநிலையாய் வந்தது” (தொல்.வினை. சூ. 36, சே.; ந.; இ. வி.சூ. 328, உரை.)

20. மு. ஐங்குறு.9: 4.

21. தொன்முதிர்வேளிர்-அகத்தியமுனிவராற் கொண்டுவரப்பட்ட பழமை முதிர்ந்த வேளிர்; இது, “துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல்வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்......கொண்டுபோந்து” “மலய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்” (தொல்.பாயிரம.் ந.; அகத். சூ. 32, ந.) எனப் போந்துள்ள வாக்கியங்களால் விளங்குகின்றது.

22. ‘தரல்’ படர்க்கைக்கண் வந்ததற்கு மேற்கோள்; நன். மயிலை. சூ. 380.

24. “ ‘நெல்லரியு மிருந்தொழுவர், என்னும் புறப்பாட்டினுள், ‘நின்று நிலைஇயர் நின்னாண்மீன்’ என அவன் நாளிற்கு முற்கூறியவாற்றான் ஓர் இடையூறுகண்டு அவன்கண் அன்பால் அஞ்சி ஓம்படை கூறியது” (தொல்.புறத். 36, ந.) 24-5. புறநா. 229 : 10 - 12.

29. “அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையும், ஆணணி புகுதலு மழிபடை தாங்கலும், வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்த” (சிறுபாண்.210 - 12); “ஒன்னா ரோட்டிய செருப்புகன் மறவர், வாள்வலம் புணர்ந்தநின் றாள்வலம் வாழ்த்த” (மதுரைக்726 - 7); “தாள் வலம்படவென்று” (கலித்.31 : 13)

30. “வரையாது கொடுத்தலும், பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்த” (சிறுபாண்.217 - 8)

32. தண்கமழ்தேறல் : “தண்கமழ் நறுந்தேறல்” (கலித். 73 : 4); “தண்ணற வுண்களி” (திருச்சிற்.122)

31-33. புறநா.56 : 18 - 21, 367; 6 - 7; “மகிழ்.......மகளிர், போக்கில் பொலங்கல நிறையப் பல்கால், வாக்குபு தாத்தர” (பொருந.84 - 7); “இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய, மணங்கமழ் தேறன் மடுப்ப நாளும், மகிழ்ந்தினி துறைமதி பெரும” (மதுரைக். 779 - 81); “பூங்குழை மகளிர் பொலங்கலத் தேந்திய, தேங்கமழ் தேறலொடு தெளிமது மடுப்பினும்” (பெருங்.2. 14 : 60 - 61)

34-6. புறநா. 165 : 1 - 5, 366 : 1 - 5; “மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கண் மாயா, தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய், வீந்தவ ரென்பவர் வீந்தவ ரேனும், ஈந்தவ ரல்ல திருந்தவர் யாரே” (கம்ப.வேள்வி. 30)

(24)