96
அலர்பூந் தும்பை யம்பகட்டு மார்பிற்
றிரண்டுநீடு தடக்கை யென்னை யிளையோற்
கிரண்டெழுந் தனவாற் பகையே யொன்றே
பூப்போ லுண்கண் பசந்துதோ ணுணுகி
5நோக்கிய மகளிர்ப் பிணித்தன் றொன்றே
விழவின் றாயினும் படுபதம் பிழையாது
மையூன் மொசித்த வொக்கலொடு துறைநீர்க்
கைமான் கொள்ளு மோவென
உறையுண் முனியுமவன் செல்லு மூரே.

திணை - அது; துறை - இயன்மொழி.

அவன்மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

(இ - ள்.) மலர்ந்த பூவையுடைய தும்பைக்கண்ணியை அணிந்த அழகிய வலிய மார்பினையும் திரண்டு நீண்ட பெரிய கையினையுமுடைய என் இறைவன்மகன் இளையோனுக்குப் பகை இரண்டு தோன்றின; அவற்றுள்
பூப்போலும் வடிவினையுடைய மையுண்டகண்கள் பசப்பத் தோள் மெலியத்
தன்னைப் பார்த்த மகளிரை நெஞ்சு பிணித்ததனால் அவர் துனி கூருதலின்
உள்ளதாயது ஒருபகை; அவன் எடுத்துவிட்டுச் சென்றிருக்கும் ஊர், விழாவில்லையாயினும், உண்டாக்கப்படும் உணவு யாவர்க்கும் தப்பாமற் செம்மறியாட்டுத் தசையைத் தின்ற சுற்றத்துடனே யாறுங்குளனு முதலாகியவற்றின் துறைநீரை அவன்யானை முகந்துண்ணுமெனக் கருதி அவ்விடத்துறைதலை வெறுக்கும்; அவ்வெறுத்ததனால் உளதாயது ஒரு பகை; ஆகப் பகை இரண்டு-எ - று.

பசந்து நுணுகி என்னும் செய்தெனெச்சங்களைச் செயவெனெச்சமாக்கி, அவற்றைப் பிணித்தன்றென்னும் வினையோடு முடிக்க.

ஓகாரம் : அசைநிலை

இதனால், அவன் இன்பச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு.


(கு - ரை.) 1. அம்பகட்டு மார்பு : புறநா. 88 : 4.

5. பிணித்தன்று - கட்டியது. 6. பதம் - உணவு.

7. மொசித்தல் - உண்டல்; "மொய்கொண் மாக்கண் மொசிக்க வூண் சுரந்தனள்" (மணி. 19 : 136); "மொசிவா யுழுவை" (பெருங். 2. 17 : 24) 8. கைமான் - யானை.

9. "முனிதல் - வெறுத்தல்; அஃது அருளும் சினமுமின்றி இடை நிகர்த்தாதல்; 'வாழ்க்கை முனிந்தான்' எ - ம், 'உறையுண் முனியுமவன் செல்லு மூரே ’ எ - ம் சொல்லுபவாதலின்" (தொல். மெய்ப்பாடு. சூ. 12, பேர்.)

7 - 9. புறநா. 15 : 9 - 10, 16 : 6, 23 : 2.

(96)