337
ஆர்கலி யினனே சோணாட் டண்ணல்
கவிகை மண்ணாள் செல்வ ராயினும்
வாள்வலத் தொழியப் பாடிச் சென்றாஅர்
வாறொ கமலர.......................................
5ஈத லானா விலங்குதொடித் தடக்கைப்
பாரி பறம்பிற் பனிச்சுனை போலக்
காண்டற் கரிய ளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
10அகிலார் நறும்புகை யைதுசென் றடங்கிய
கபில நெடுநகர்க் கமழு நாற்றமொடு
மனைச்செறிந் தனளே வாணுத லினியே
அற்றன் றாகலிற் றெற்றெனப் போற்றிக்
காய்நெற் கவளந் தீற்றிக் காவுதொறும்
15கடுங்கண் யானை காப்பன ரன்றி
வருத லானார் வேந்தர் தன்னையர்
பொருசமங் கடந்த வுருகெழு நெடுவேற்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்றிவர் மறனு மிற்றாற் றெற்றென
20யாரா குவர்கொ றாமே நேரிழை
உருத்த பல்சுணங் கணிந்த
மருப்பிள வனமுலை ஞெமுக்கு வோரே.

(பி - ம்.) 1 ‘ஆர்கலிவினனே சேணாட்டண்ணல்' 3 ‘பாடிச் சேரார்' 11 ‘நெடுநககா' 16 ‘தன்னையலர்' 18 ‘தலைய' 21 ‘உரித்தல் பல்'

திணையும் துறையும் அவை.

கபிலர்.


(கு - ரை.) 1. அண்ணல் - தலைவன். 5. ஈதல் ஆனா - கொடுத்தல் தவிராத.

6. "பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்" (176) என முன்னும் இச்சுனை பாராட்டப்பட்டுள்ளது.

2 - 6. அரசராக இருந்தாலும் போர்செய்தலையொழித்துப் புகழ்ந்து பாடிக்கொண்டு வருவராயின், அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் இயல்பினனென்று பாரியின் கொடைச்சிறப்புக் கூறினார் ; புறநா. 109 - ஆம் பாட்டாலும் விளங்கும்.

6 - 7. "மன்னுயி ரறியாத் துன்னரும் பொதியிற், சூருடை யடுக்கத் தாஅங் கடுப்ப, வேனி லானே தண்ணியள்" (குறுந்.376 : 1 - 3) ; "பொன்னணி திகிரியஞ் செல்வன் பொற்புடைக், கன்னிய மகளிரிற் காண்டற் கரியன, நன்மணி புரித்தன வாவி நான்குள" (சீவக.1203)

8. பெண்மை - அமைதித்தன்மை ; சீவக.356, ந.

9 - 10. விரிந்த துகில் புகைக்கு உவமை ; முருகு.138.

11. பாடினோர்பெயர் இதிற் குறிப்பிக்கப்பெற்றுள்ளது.

12. வாணுதல் - கன்னி.

14. நெற்கவளம் : புறநா. 44 : 2, குறிப்புரை. தீற்றி - உண்பித்து ; சீவக.3105.

16. வேந்தர் - மணம்பேசவந்த அரசர். தன்னையர் - தமையன்மார்.

21. உருத்தல் - தோன்றல்.

22. ஞெமுக்குவோர் - அழுத்துவோர் ; சீவக.2552.

(337)