114
ஈண்டுநின் றோர்க்குந் தோன்றுஞ் சிறுவரை
சென்றுநின் றோர்க்குந் தோன்று மன்ற
களிறுமென் றிட்ட கவளம் போல
நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகு முன்றிற்
றேர்வீ சிருக்கை நெடியோன் குன்றே.
திணையும் துறையும் அவை.

திணையும் துறையும் அவை.

அவன்மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.

(இ - ள்.) இவ்விடத்து நின்றோர்க்குந் தோன்றும், சிறிது எல்லை போய் நின்றோர்க்குந் தோன்றும், நிச்சயமாக; யானை மென்று போகடப்பட்ட கவளத்தினது கோதுபோல மதுப்பிழிந்து போகடப்பட்ட கோதுடைத்தாகிய சிதறியவற்றினின்றும் வார்ந்த மதுச்சேறு ஒழுகும் முற்றத்தையுடைய தேர்வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை-எ - று.

நெடியோன் குன்று தோன்றுமென்றது புகழான் உயர்ந்து காணா தார்க்கும் செவிப்புலனாகத் தோன்றும், அவன் உளனாயகாலத்து; இப்பொழுது பிறமலைபோலக் கட்புலனாகத் தோன்றும் அளவாயிற்றெனக் கையற்றுக் கூறியவாறாகக் கொள்க.


(கு - ரை.) 2. மன்ற : தெளிவென்னும் பொருளைத்தருவதோரிடைச் சொல்; "மன்றவென்கிளவி தேற்றம் செய்யும்" என்பது தொல். இடை. சூ. 17.

6. தேர்வீசிருக்கை : புறநா. 118 : 5; "தேர்வீசு கவிகை" (மலைபடு. 399) நெடியோன் - பாரி.

(114)