63
எனைப்பல் யானையு மம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படையொழிந் தனவே
விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம்
மறத்தகை மைந்தரொ டாண்டுப்பட் டனவே
5தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்
தோல்கண் மறைப்ப வொருங்குமாய்ந் தனரே
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குந ரின்மையி னிருந்துவிளிந் தனவே
சாந்தமை மார்பி னெடுவேல் பாய்ந்தென
10வேந்தரும் பொருதுகளத் தொழிந்தன ரினியே
என்னா வதுகொ றானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவன் முக்கித் தண்புனற் பாயும்
யாண ரறாஅ வைப்பிற்
15காமர் கிடக்கையவ ரகன்றலை நாடே..

திணையும் துறையும் அவை.

அவரை அக்களத்திற் பரணர் பாடியது.

(இ - ள்.) எத்துணையும் பலவாகியயானையும், அம்பாற்கலங்கி இனிமேல் உண்டாக்கும்போரின்றிப் படையிடத்துப் பட்டன; 1 வெற்றிப்புகழ் மாட்சிமைப்பட்ட குதிரையெல்லாம், ஆண்மைக்கேற்றவீரக்கூறுபாட்டையுடைய மேலாட்களுடனே அக்களத்தேபட்டன; தேர்கொடுவர வந்த போரிற்கு அமைந்தோரெல்லாம்தாம் பிடித்த பரிசை (கேடகம்) தம் கண் மறைப்பச்சேரப்பட்டனர்; வாரால் விசிக்கப்பட்டுத் தொழில்மாட்சிமைப்பட்ட மயிர்சீவாது போர்க்கப்பட்டகண்ணையுடைய முரசமெல்லாம், பரிப்பார் படுதலான்இருந்துகெட்டன; சாந்தமைந்த மார்பின் கண்ணேநெடியவேல் பாய்ந்தனவாக அரசரும் பொருது அக்களத்தின்கண்ணே மடிந்தனர்; இனி, என்ன வருத்தமுறுவதோதான்?கழனிக்கண் ஆம்பற்றண்டாற் செய்த வளையணிந்தகையினையுடைய மகளிர் செவ்வி அவலை முக்கிக்குளிர்ந்த புனற்கண்ணே பாயும் புதுவருவாய் அறாத ஊர்களையுடையஅழகிய கிடையையுடைய அவரது அகன்ற இடத்தையுடையநாடு-எ - று.

அன்னோ என்னாவதுகொலென்றுபாடமோதுவாரும் உளர்.

நாடுதான் என்னாவதுகொலெனக் கூட்டுக.

நாடென்னும் ஒருமைநோக்கி, என்னாவதுகொலெனஒருமையாற் கூறப்பட்டது.


(கு - ரை.) 3. விறற்புகழ் - பிரதாபம்.

5. “நோன்புரித் தடக்கைச்சான்றோர்” (பதிற். 14 : 12)

7. புறநா. 50 : 1 - 5, 288 : 1 - 4; “ஓடாநல்லேற் றுரிவை தைஇய, பாடுகொண் முரசம்” (அகநா.334); “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது,போர்த்த, மாக்கண் முரசம்” (மதுரைக். 732 -3); “ஏற்றுரியி னிமிழ்முரசம், கூற்றுட்க வெழீஇச்சிலைப்ப”(யா. வி. மேற். ‘தாழிரும்பிணர்’); “மயிர்க்கண்முரசமொடு வான்பலி யூட்டி” (சிலப். 5 : 88); “புனைமருப்பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற, கனைகுரலுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த, துனைகுரன்முரசம்” (சீவக. 2899); “பசும்பொற் பலவார்விசித்துப் பிணியுறீஇ........ஏற்றுரி போர்த்த......முரசம்”(பெருங். 2. 2 : 20 - 9)

8. பொறுக்குநர்-தாங்குகிறவர்.

9. புறநா. 308 : 6 - 7; “பாடுபுலர்ந்தநறுஞ்சாந்தின், விழுமிய பெரியோர்” (மதுரைக்.226 - 7)

12. மு. புறநா. 352 : 5; ஆம்பல்வள்ளித்தொடி : “ஆம்பனுடங்கு மணிவளையும்” (பு.வெ. 329); “பவள வளைசெறித்தாட் கண்டணிந்தாள்பச்சைக், குவளைப் பசுந்தண்டு கொண்டு” (பரி.11 : 101 - 2)

13. பாசவல் - பசுமையான அவலை. முக்குதல்- வாய் நிரம்பக் கொள்ளுதல்; “முதிய வானமீன்வாரிமுக்கி”, “மலைகள் வாரியன வேழு முக்கி”(தக்க. 358, 410) ; “முத்தைக், கொக்கு முக்கிக்கக்கிவிக்குமச் சோலைக் குறுங்குடியே” (தனிப்பாடல்);“கங்க முக்கின சிறுமீனெல்லாம்”’ (திருவிளை.இந்திரன். 56)
12-3. மகளிர் புனற்பாய்தல் : புறநா. 352 : 6.

14. “அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்”(பொருந. 1)

15. புறநா. 98 : 20. (63)


1. “மறம்வீங்கு பல்புகழ்” (பதிற்.12)