206
வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கு முரனுடை யுள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
5பரிசிலர்க் கடையா வாயி லோயே
கடுமான் றோன்ற னெடுமா னஞ்சி
தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல்
அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென
வறுந்தலை யுலகமு மன்றே யதனாற்
10காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை
மரங்கொஃ றச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செலினு மத்திசைச் சோறே.

(பி - ம்.) 3 ‘முன்னியது’, ‘முரணுடை’ 11 ‘மரங் கொறச்சர்’

திணையும் துறையும் அவை.

அதியமான் நெடுமானஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.

(இ - ள்.) வாயில்காப்போய்! வாயில்காப்போய்! வண்மையுடையோரது செவியிடத்தே விளங்கிய சொற்களை விதைத்துத் தாம் நினைந்த பரிசிலை விளைக்கும் வலியையுடைத்தாகிய நெஞ்சினையுடைய, மேம்பாட்டிற்கு வருந்தும் இப்பரிசிலான் வாழும் இல்வாழ்க்கையையுடைய பரிசிலர்க்கு அடையாத வாயில்காப்போய்! விரைந்த குதிரையையுடைய குருசிலாகிய நெடுமானஞ்சி தான் தன் தரமறியான்கொல்லோ? அது கிடக்க, என்தரம் அறியான்கொல்லோ? அறிவும் புகழுமுடையோர் இறந்தாராக வறிய இடத்தையுடைய உலகமுமன்றே; ஆகலாற் காவினேம் கலங்களை; கட்டினேம் முட்டுக்களை; மரத்தைத் துணிக்குந் தச்சன் பயந்த மழுவையுடைய கைத்தொழில் வல்லமகார் காட்டிடத்துச் சென்றால் அக்காட்டகம் பயன்படுமாறு அவர்க்கு எத்தன்மைத்து? எமக்கும் யாதொரு திசைக்கட் போகினும் அத்திசைக்கட் சோறு அத்தன்மைத்து-எ - று.

கலம் - யாழுமாம்.

உள்ளத்தையுடைய பரிசிலரெனினும் அமையும்.

மழுவென்றது வாய்ச்சியை; தறிகையுமாம்.

காட்டகமென்றாரேனும் கருதியது அதன்கண் மரமாகக் கொள்க.

பரிசிலர்க்குச் சிறாரும், கல்விக்கு மழுவும், செல்லுந்திசைக்குக் காடும், சோற்றிற்குக் காட்டுள் மரமும் உவமையாகக் கொள்க.


(கு - ரை.) 1. மு. சிலப்.20 : 24.

விளியேற்கும்பொழுது ஆனீறு ஏகாரம்பெற்று வந்ததற்கும் (தொல். விளி. சூ. 12, .), இறுதியவ்வொற்றாய் ஈற்றயலாகாரம் ஓகாரமாய் ஏகாரம் மிக்கதற்கும் (நன்.சூ. 306, மயிலை.; நன். வி.சூ. 307) மேற்கோள்.

2.புறநா. 46 : 3, 237 : 4 - 5. 4. மு. புறநா. 47 : 6.

2-5. கலித். 68 : 3 - 5.

8-9. புறநா. 207 : 7.

10. “நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்”, “காஅய்க் கொண்ட நும்மியம்” (மலைபடு. 13, 365)

10-13. “ஆற்றவுங் கற்றா ரறிவுடையா ரஃதுடையார், நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு, வேற்றுநா டாகாதமவேயா மாயினால், ஆற்றுணா வேண்டுவ தில்” (பழ. 55)

மு. பாடாண்டிணைத் துறைகளுள், ‘சேய்வரல் வருத்தம் வீடவாயில், காவலர்க் குரைத்த கடைநிலை’ என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 29, இளம்.); ‘வாயிலோயே.....சோறே: இது தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது வாயிலோனை நோக்கிக் கூறலிற் பரிசில் கடாயதன்றாம்’ (தொல். புறத்திணை. சூ. 35, .)

(206)