228
கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
இருடிணிந் தன்ன குரூஉத்திரட் பரூஉப்புகை
அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
5அளியை நீயே யாங்கா குவைகொல்
நிலவரை சூட்டிய நீணெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை
விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பிற் செம்பியர் மருகன்
10கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவ ருலக மெய்தின னாதலின்
அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி
வனைதல் வேட்டனை யாயி னெனையதூஉம்
இருநிலந் திகிரியாப் பெருமலை
15மண்ணா வனைத லொல்லுமோ நினக்கே.

திணை - அது; துறை - ஆனந்தப்பையுள்.

அவனை ஐயூர் (பி - ம். உறையூர்) முடவனார் பாடியது.

ஆனந்தப்பையுளாவது:-

“விழுமங் கூர வேய்த்தோ ளரிவை
கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று” (பு. வெ. 226)

(இ - ள்.) அடுகலம்வனையும் வேட்கோவே (வேட்கோ - குயவன்)! அடுகலம்வனையும் வேட்கோவே! இருள் நீங்கி ஓரிடத்தே செறிந்து நின்றாற்போன்ற நிறமுடைத்தாய்த் திரண்ட மிக்கபுகை அகலிய பெரிய ஆகாயத்தின்கட் சென்று தங்கும் சூளையையுடைய அகலிய இடத்தினை யுடைய பழைய ஊரின்கட் கலம் வனையும் வேட்கோவே! இரங்கத்தகுவை; நீ என்ன வருத்தமுறுவைதான்? நிலவெல்லையின்கண் பரப்பிய மிக்க பெரிய சேனையினையுடைய அறிவுடையோர் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழினையும் பரந்த சுடரினையுமுடைய ஆதித்தன் வானத்தின்கண் பரந்தா லொத்த சேய்மைக்கண்ணே விளங்கும் தலைமையையுடைய செம்பியர் மரபினுள்ளான், கொடிகள் நுடங்காநின்ற யானையினையுடைய மிகப்பெரிய வளவன், அவன் தேவருடைய விண்ணுலகத்தை அடைந்தானாகலான், அப்பெற்றிப்பட்டோனைக் கவிக்கும் இடமகன்ற தாழியை வனைதலை நீ விரும்பினாயாயின் எப்படியும் பெரிய நிலவட்டம் உருளியாகப் பெரிய மேருமலை மண்ணாக வனைய இயலுமோ? இயலாதன்றே நினக்கு-எ-று.
அடுக்கு விரைவின்கண் வந்தது.

கலஞ்செய்கோவே, வளவன் தேவருலகமெய்தினனாதலால், அன்னோற் கவிக்கும் தாழி வனைதல் வேட்டனையாயின் இருநிலம் திகிரியாக மாமேரு மண்ணாக வனைதலொல்லுமோ? ஒல்லாமையின் யாங்காகுவை? நீ இரங்கத் தக்காயெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

இது சுற்றத்தார் இரங்கிக் கூறுதலின், ஆனந்தப்பையுளாயிற்று.


(கு - ரை.) 1. மு. புறநா. 256 : 1.

11-2. புறநா. 238, 236, 364; “தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்” (மணி. 6 : 67)

12-4. “மாயிருந் தாழி கவிப்பத், தாவின்று கழிகவெற் கொள்ளாக் கூற்றே” (நற். 271 : 11 - 2)

(228)