356
களரி பரந்து கள்ளி போகிப்
பகலுங் கூவுங் கூகையொடு பிறழ்பல்
ஈம விளக்கிற் பேஎய் மகளிரொ
டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு
5நெஞ்சமர் 1காதல ரழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப
எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து
மன்பதைக் கொல்லாந் தானாய்த்
தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே.

(பி - ம்.) 1. ‘கள்ளிபொங்கிப’ 2 ‘கூஉங்’ ‘பிறழ்வால’, 4 ‘தன்றி மஞ்சு’ 7 ‘எல்லாப்’

திணையும் துறையும் அவை.

தாயங்கண்ணனார் (பி - ம். கதையங்கண்ணனார்)


(கு - ரை.) 1. களரி - காடு.

2. புறநா.362 : 17 - 8; "நன்பகலுங் கூகை நகும்" (பு. வெ.39)

3. ஈமவிளக்கு - பிணஞ்சுடும் விறகின் அழல்.

4. அஞ்சுவந்தன்று - அச்சம் வரப்பெற்றது. முதுகாடு-மயானம்.

5. அமர்காதலர் - விரும்பிய காதலையுடைய மகளிர்.

6. என்பு - எலும்பு.

7. எல்லாருடைய பிற்காலத்தையும் தான்கண்டு.

8. மன்பதை - மக்கட்டொகுதி. தானாய்-தானே இருப்பிடமாகி; "மக்கட் பிணத்த சுடுகாடு" (நாலடி.121)

மு.இச்செய்யுள் காடுவாழ்த்தென்னும் துறைக்கு மேற்கோள்; தொல்.புறந்திணை. சூ. 19, இளம்; சூ. 24, ந.

(356)


1. இந்நூலின் முதற்பதிப்பில் இதன் முன்பிருந்த பகுதி சிலபிரதிகளில் 377-ஆம் பாட்டின் முதலில் வரையப்பட்டிருந்தமையாலும், இச்செய்யுள் பழையவுரைகளில் இந்த அளவிலேயே மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்த மையாலும், பொருண் முடிபாலும் இங்ஙனம் பதிப்பிக்கலாயிற்று.