(இ - ள்.) குன்றுகளும் மலைகளும் பல பின்கழிய வந்தேன் யான் பரிசில்கொண்டேனாய்ப் போதற்கெனச் சொல்லி நின்றவென்னை அன்புற்றருளி இப்பொருளைக் கொண்டு இவ்வாறு போக, தானெனச்சொல்ல, என்னை எப்பரிசறிந்தான் பகைவரால் தடுத்தற்கரிய வேந்தன்? என்னை யழைத்துக்காணாதே தந்த இப்பொருட்கு யான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலனல்லேன்; விரும்பித் தினைத்துணையளவாயினும் நன்று, அந்தப் பரிசிலரது கல்விமுதலாகிய பொருந்திய எல்லையையறிந்து கொடுத்து விடின்-எ - று. ஈங்கனஞ் செல்கவென்றது, காணாதே அவன் சொல்லிவிட்ட வார்த்தையை. அவர்துணையளவறிந்து பேணி நல்கினர் விடின், தினையளவாயினும் இனிதெனக் கூட்டி வினைமுடிவு செய்க. யான் தரங்கெடப் பொருள் கொடுபோமவன் அல்லேன்; அவனாயின் இதுவும் கொடுபோவன்; நீ எனக்கு தரமறிந்து தரவேண்டுமென்பதாம். ‘அவர் துணையளவு’ எனத் தம்மை உலகின்மேலிட்டுக் கூறினார். |