394
சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்
ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்
வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்
வள்ளிய னாதல் வையகம் புகழினும்
உள்ள லோம்புமி னுயர்மொழிப் புலவீர்
யானும், இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை
ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப்
பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினே னாக
அகமலி யுவகையொ டணுகல் வேண்டிக்
கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழ நல்கின னஞ்சி
யானது பெயர்த்தனெ னாகத் தானது
சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர்
பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண்
டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்
துன்னரும் பரிசி றருமென
என்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே.

(பி - ம்.) 1 'சீந்தியுலாநிவாநத' 2 'ஒலிகதிர்க்கழனி' 3 'குடவன்' 4 'வளளயிழுதல', 'வளளினியெனாதல' 5 'உள்ளமோம்புமின்' 14 'வுணரமை' 15 'பகறகொண்டு', 'பதற்கொண்டு'

திணையும் துறையும் அவை.

கடைநிலையாயினவெல்லாம் பாடாண்டிணை.

சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் 1கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார்.


(கு - ரை.) 1. வில் உலாவி நிமிர்ந்த மார்பு ; "சிலையுலாய் நிமிர்ந்த மார்பன்" (சீவக. 2976)

3. வலிதுஞ்சு தடக்கை - வன்மை நிலைபெற்ற பெரிய கையையுடைய. வாய்வாள் - குறிதப்பாத வாள்.
தடவென்னும் உரிச்சொல் பெருமையை யுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உரி. சூ. 24, சே.; உரி. 22, .; இ. வி.சூ. 284, உரை.

4. வள்ளியனாதல் - பெருங்கொடையை உடையானாதலை.

5. உள்ளலோம்புமின் - நினைத்தலைத் தவிர்மின். 16. வைகறையில்.

7. "ஒருகண் மாக்கிணை யொற்றுபு" (புறநா. 392 : 5)

8. பாடு - ஒலி. தந்தை - பாட்டுடைத் தலைவன் தந்தை.

9. வஞ்சி - பகைமேற் செல்லுதலை.

11 - 2. "இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர், பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர், தேற்றா வீகையு முளதுகொல்" (புறநா. 140 : 7-9)

13. பெயர்த்தனெனாக - பெயர்க்க.

15. அதற்கொண்டு - அதனால்.

16. "இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற" (புறநா. 390 : 20) மு. புறநா. 140.

இப்பாட்டினைப் பொருநராற்றுப்படைக்கு மேற்கோளாகக் காட்டினர் ; தொல். புறத்திணை. சூ. 30, இளம்.; சூ 36, ந.
இப்பாட்டு, புகழாப்புகழ்ச்சியென்னும் அணியின்பாற்படும்.

(394)


1. புதுக்கோட்டைக்குத் தெற்கே கோனாட்டில் எறிச்சியென்று பழையதோர் ஊர் உள்ளது; அதிற் பஞ்ச பாண்டவர் சுனைகளென்று ஐந்து சுனைகளும் ஒரு சிவஸ்தலமும் உள்ளன. இங்கே எறிச்சிலூரென்று அவ்வூரென்று கருதப்படுகின்றது.