391
தண்டுளி பல பொழிந் தெழிலி யிசைக்கும்
விண்டு வனைய விண்டோய் பிறங்கல்
முகடுற வுயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
5திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி
அரிய லார்கைய ருண்டினி துவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
ஈங்குவந் திறுத்தவென் னிரும்பே ரொக்கல்
தீர்கை விடுக்கும் பண்பில முதுகுடி
10நன.........வினவலின்
முன்னும் வந்தோன் மருங்கில னின்னும்
அளிய னாகலிற் பொருந னிவனென
நின்னுணர்ந் தறியுந ரென்னுணர்ந்து கூறக்
காண்கு வந்திசிற் பெரும...................
15.......................பெருங்கழி நுழைமீ னருந்தும்
துதைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
ததைந்த புனனின் செழுநகர் வரைப்பின்
நெஞ்சமர் காத னின்வெய் யோளொ
டின்றுயி..........ஞ்சொல்
20துளிபத னறிந்து பொழிய
வேலி யாயிரம் விளைகநின் வயலே.

(பி - ம்.) 2 ‘விணடெறபயயிறஙகன’ 3 ‘நெலலினகீழவர்’ 9 ‘பண்பின’ 15 ’துழைமீன’ 17 ’தநதைதநத புனயானின செழுந காவனபபின்’ 18 ‘காதனீவெயயொடு’

திணை - அது; துறை - கடைநிலை.

பொறையாற்று கிழானைக் கல்லாடனார் (பி - ம். காலலனார்)


(கு - ரை.) 2. விண்டு - திருமால். பிறங்கல் - மலை ; இங்கே தானியப்போர்.

3. முகடு - உச்சி.

2 - 3. “விண்டு வனைய வெண்ணெற் போர்வின்” (ஐங்குறு. 58)

4. பகடுதருபெருவளம் - எருது முதலியவைகள் உழுதுண்டாக்கிய பல பண்டம். 5. கெண்டி - கிண்டி.

6. அரியல் - கள். 7. பசித்தென - பசித்ததாக.

8. இரும்பேரொக்கல் - வறுமையாற்கரிந்த பெரிய சுற்றங்கள்.

9. பண்பில - பண்பில்லாதன.

11. மருங்கு - சுற்றம். 12. ஆதலின் இவன் அளியன்.

12 - 3. முருகு. 282 - 5.

15. நுழைமீன் - ஒருவகைமீன் ; நுழைந்துசெல்லுகின்ற மீனுமாம்.

16. புதா - ஒருவகைநாரை ; இப்பெயர் போதாவெனவும் வழங்கும் ; “உள்ளு மூரலும் புள்ளும் புதாவும்” (சிலப். 10 : 117)

18. நின்வெய்யோளொடு - நின்னால்விரும்பப்பட்ட மனைவியோடு.

20. பதனறிந்து - காலமறிந்து.

21. ஆயிரம்விளைக - ஆயிரக்கலம் விளைக ; “வேலி, யாயிரம் விளையுட் டாகக், காவிரி புரக்கு நாடு” (பொருந. 246 - 8)

(391)