(கு - ரை.) 1. மூன்றாம் வேற்றுமைவிரியைக்கூறும் சூத்திரத்தில், ‘அன்ன பிறவும்’ என்பதற்கு மேற்கோள்; தொல். வேற்றுமை. சூ. 13, சே.; ஆனுருபு சகார்த்தமாய் வந்ததற்கு மேற்கோள்; பிரயோக.காரக. 16, உரை. 2. ஆன் ஒடுவாதற்கு மேற்கோள்; தொல்.வேற்றுமை. சூ. 13, ந. 1-2. “தூங்கு......மருப்பின என்பன போல்வனவெல்லாம் ஆன் ஒடுவாயின” (இ. வி.சூ. 200, உரை); “தூங்குகையா லோங்குநடைய, உறழ்மணியா லுயர்மருப்பின.....இவை உடனிகழச்சி; ஆன் உருபோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க” (நன். மயிலை.சூ. 296; நன். வி. சூ. 297) 6. யானைமதம் மணமுடையதென்பதையும் அதில் வண்டுமொய்க்கு மென்பதையும், “வரிவண் டார்க்கும் வாய்புகு கடாஅம்” (புறநா.93 : 12 - 3), “ஈர்நறுங் கமழ்கடாஅத் தினம்பிரி யொருத்தல்”, “வரிவண், டோங்குய ரெழில்யானைக் கனைகடாங் கமழ்நாற்றம், ஆங்கவை விருந்தாற்ற” (கலித்.21 : 2. 66 : 2 - 4), “வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்த்துப், பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல்” (அகநா.78 : 3 - 4), “பூநாறு கடாஞ் செருக்கி” (மணி.19 : 22), “புணர்மருப்பி யானையின் புயல்கொண் மும்மத, மணமகள் கதுப்பென நாறும்” (சீவக.1621), “பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக், காத்த வங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப், பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப்பொடி யாகக், காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததோர் களிறு” (கம்ப.வரைக். 6), “விழிமலர்ப்பூ சனையுஞற்றித் திருநெடுமால் பெறுமொழி மீள வாங்கி, வழியொழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி முடைநாற்ற மாறு மாற்றாற், பொழிமதநீர் விரையேற்றி” (காஞ்சிப்.கடவுள். 5) என்பவற்றால் அறிக. 6-9. “கமழ்கடாஅத், தளறுபட்ட நறுஞ்சென்னிய, வரைமருளு முயர்தோன்றல” (மதுரைக். 44 - 6) 10-12. புறநா.60 : 3 - 12. 15. “கொடி-ஒழுங்கு; ‘கொடிக்கூரை’ என்றார்” (சீவக.1976, ந.) 16. “சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி” (முருகு.283) 20. புறநா.97 : 15; “செய்பொன் வாகை” (மணி.26 : 90) 20-21. அரசர் தமக்குரிய அடையாளப்பூவொடு புறத்திணைப் பூக்களையும் விரவித் தொடுப்பித்துத் தாம் சூடிக்கொள்ளுதலும், வீரர்க்குச் சூட்டுதலும் மரபு; புறநா.76 : 4 - 5, 77 : 2 - 3, 100 : 3 - 6; “குடைநிலை வஞ்சியும்.....வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலியச் சூட்டி” (சிலப்.25 : 141 - 7); “இளவரிக் கவட்டிலை யாரொ டேர்பெறத், துளவிய றும்பையுஞ் சுழியச் சூடினான்” (கம்ப.முதற்போர். 115) 27. கடும்பு - சுற்றம். 28. “கொல்லிப் பொருந” (பதிற்.73); “முள்ளூர் மன்னர் கழறொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரலற் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா.209 : 12 : 5), “கொல்லி யாண்ட குடவர் கோவே” (சிலப்.24 : ‘பாட்டுமடை’) என்பவற்றாற் கொல்லிமலை சேர பரம்பரையினர்க்குரித்தாதல் காண்க. 30. படைப்பு - செல்வம்; புறநா.188. 31-3. புறநா.68 : 19; “செருமான வேற்சென்னி தென்னுறந்தையார்தம், பெருமான் முகம்பார்த்த பின்னர் - ஒருநாளும், பூதலத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாம், காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்” (தண்டி.சூ. 21, மேற்.) என்பதும், “இலனென்னு மெவ்வமுரையாமை யீதல்” (223) என்னும் திருக்குறளின்பொருள் விசேடங்களும் இங்கே அறிதற்குரியன. 34-5. “மீக்கூறு மன்ன னிலம்” (குறள்.386) என்பதும், ‘மீக்கூறுதல்:- இவன் காக்கின்ற நாடு பசி பிணி பகைமுதலியவின்றி யாவர்க்கும் பேரின்பந் தருதலின் தேவருலகினும் நன்றென்றல்’ என்னும் அதன் உரையும் இங்கே கருதற்பாலன. (22)
1. “கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்றவழி அரசனென்பதொரு சாதியும், சேரமானென்பதொரு குடியும், வேழநோக்கினை யுடையானென்பதொரு வடிவும், சேயென்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ் சேரலிரும்பொறை யென்பதொரு சிறப்புப் பெயரும், ஒரு பொருளின்கட் கற்பனை” (குறள், 355, பரிமேல்). இச்செய்யுளின் 29, 34ஆம் அடிகளில் தலைவன் பெயர் அமைக்கப்பெற்றுள்ளது, 2. ஒரு சமயத்தில் கம்பருக்காகச் சடையப்பவள்ளல் விரைவில் வீடொன்று கட்டுவித்து அதனை நெற்கதிரால் வேய்ந்தளித்தமையின் கதிர்வேய் மங்கலமென்று அவ்வீடுள்ள ஊர் பெயர்பெற்றதென்ற பழஞ்செய்தி இங்கே கருதற்குரியது, 3. “தானை, படைத்தகையாற் பாடு பெறும்” (குறள். 768)
|