66
நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற
5வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே.

(பி - ம்.) 6 ‘வெண்ணிற்பறந்தலை’

திணை - வாகை; துறை - அரசவாகை.
1 சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்(பி - ம். வெண்ணிற்) குயத்தியார் பாடியது.

(இ - ள்.) நீர்செறிந்த பெரிய கடலின்கண்ணேமரக்கலத்தையோட்டிப் போர்செய்தற்குக் 2காற்றின்றி நாவாய் ஓடாதாக ஆண்டு வளிச்செல்வனையழைத்துஏவல்கொண்ட வலியோன் மரபினுள்ளானே! மதம் பொருந்தியயானையையுடைய கரிகால்வளவ! மேற்சென்று போரை எதிர்நின்றுகொன்ற நினது வலிதோற்ற வென்றவனே!நின்னினும் நல்லனல்லவே? தழைத்தலைக்கொண்டபுதுவருவாயையுடைய வெண்ணியென்னும் ஊர்ப்புறத்துப்போர்க்களத்தின்கண் மிகப் புகழை உலகத்துப்பொருந்திப்புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்தோன், அவ்வாறிருத்தலான்-எ - று.

புகழெய்தியென்றது புறப்புண்ணிற்குநாணுதல்தன்னை.
ஓட்டியென்பதனை ஓட்டவெனத் திரிக்க.

எய்தி : எய்தவெனத் திரிப்பினும்அமையும்; எய்தவென்று பாடமோதுவாரும் உளர்.

உரவோன்மருக! கரிகால்வளவ! வென்றோய்!வெண்ணிப்பறந்தலைப்பட்ட புறப்புண்ணாணி உலகத்துப்புகழ்மிகவெய்தி வடக்கிருந்தோன், நின்னினும் நல்லனன்றேயெனக்கூட்டுக.
இது கரிகால் வளவன் வென்றி கூறியதாகலின் அரசவாகையாயிற்று.


(கு - ரை.) 1. “நளியிரு முந்நீர்”(புறநா. 35 : 1; மணி. 12 : 92)

1-2. முற்காலத்திற் சோழனொருவன்கடலிற் காற்றை ஏவல் கொண்டமை, “வாத ராசனைவலிந்துபணி கொண்டவவனும்” (கலிங்கத். இராச.16) என்பதனாலும் விளங்குகின்றது.

4. புறநா. 242 : 4.

3-8. வெண்ணி-சோழநாட்டில் நீடாமங்கலத்திற்குமேற்கேயுள்ள ஓர் ஊர். அது தேவாரம் பெற்றஸ்தலங்களுள்ஒன்று. கோயில் வெண்ணி (கோவிலுண்ணி) என இக்காலத்துவழங்கும். அவ்வூரையும் அதனைச் சூழ்ந்துள்ள இடங்களையும்பார்க்கையில், அந்த இடம் பண்டைக்காலத்தில்மிகப்பெரிய நகராக இருந்திருக்க வேண்டுமென்றுதோற்றுகின்றது. அகநா. 55 : 10 - 15 : “காய்சின மொய்ம்பிற்பெரும்பெயர்க் கரிகால், ஆர்கலி நறவின் வெண்ணிவாயிற், சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்......வேந்தர்சாய,மொய்வலியறுத்த ஞான்றை” (அகநா. 246 : 8 - 13);“இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை, அரவாய்வேம்பி னங்குழைத் தெரியலும், ஓங்கிருஞ்சென்னி மேம்படமிலைந்த, இருபெரு வேந்தரு மொருகளத் தவிய, வெண்ணித்தாக்கிய வெருவரு நோன்றாட், கண்ணார் கண்ணிக் கரிகால்வளவன்”(பொருந. 143-8)

(66)


1. பாட்டுடைத்தலைவன் பெயர் 3-ஆம்அடியில் வந்துள்ளது.

2 “வாயுவினை நோக்கியுள மாண்டவினைநாவாய்” (குண்டலகேசி)