393
பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறுநெடுந் துணையொடு கூமை வீதலிற்
குடிமுறை பாடி யொய்யென வருந்தி
அடனசை மறந்தவெங் குழிசி மலர்க்கும்
5கடனறி யாளர் பிறநாட் டின்மையின்
வள்ளன் மையினெம் வரைவோர் யாரென
உள்ளிய வுள்ளமொ டுலைநசை துணையா
................கவக மெல்லா மொருபாற் பட்டென
மலர்தா ரண்ணனி னல்லிசை யுள்ளி
10ஈர்ங்கை மறந்தவெ னிரும்பே ரொக்கல்
கூர்ந்த வெவ்வம்விடக் கொழுநிணங் கிழிப்பக்
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்ட மிடை நிறைந் தன்ன
வெண்ணிண மூரி யருள நாளுற
15ஈன்ற வரவி னாவுருக் கடுக்குமென்
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன
அகன்றுமடி கலிங்க முடீஇச் செல்வமும்
கேடின்று நல்குமதி பெரும மாசில்
20மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி
ஆடுமக ளல்கு லொப்ப வாடிக்
கோடை யாயினுங் கோடி.......
காவிரி புரக்கு நன்னாட்டுப் பொருந
வாய்வாள் வளவன் வாழ்கெனப்
25பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே.

(பி - ம்.) 6 ‘வளளனமெனவவரை’ 7 ‘டுறுநசை’ 10 ‘மறைந்த’ 11 ‘கூர்ந்தவேவம்வீட’ 12 ‘விடுநிறை’ 15 ‘ஈன்றவாவினாருககடுககும்’ 16 ‘தொனறுபடி’ 22 ‘கொடியாயினுங்’ 24 ‘வளருவன’

திணையும் துறையும் அவை.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார்.


(கு - ரை.) 1. பழங்கண் - துன்பம். 2. துணை - மனைவி.

4. குழிசி - சமைத்தற்குரிய கலம். மலர்க்கும் - நிமிரச்செய்யும்.

6. எம்வரைவோர் - எம்மை ஏற்றுக்கொள்வோர்.

4 - 6. குழிசி மலர்க்குங் கடனறியாளர் - அரிசி முதலியன இல்லா மையாற் கவிழ்த்துவைக்கப்பட்டுள்ள கலத்தைச் சமைத்தற்பொருட்டு அடுப்பில் நிமிர்த்துவைக்கச் செய்யும் வண்மையையுடையார் ; "கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச், சுரன்முத லிருந்த சில்வளை விறலி", "ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென, ஏலாது கவிழ்ந்தவென் னிரவன் மண்டை, மலர்ப்போர் யார்" (புறநா. 103 : 3 - 4, 179 : 1 - 3) என்பவை இங்கே அறியற்பாலன.

7. உலைநசை - உலைதற்குக் காரணமான இச்சை.

9. அண்ணல் : விளி.

10. ஈர்ங்கை - உண்டு பூசிய கை ; "ஈர்ங்கை விதிரார் கயவர்" (குறள், 1077)
11. கூர்ந்த எவ்வம் - மிக்க துன்பம்.

12. பருத்திவீடு - பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு.

13. மூடைப்பண்டம் - பொதியாகிய பொருள்கள் ; "பொதிமூடைப் போரேறி" (பட்டினப். 137) ; மூடை மூட்டையென வழங்கும்.

14. நிணமூரி - நிணத்தின் துண்டம்.

12 - 4. நிணத்திற்குப் பருத்திப்பஞ்சு உவமை ; "பருத்திப் பெண்டின் பனுவ லன்ன, நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை" (புறநா. 125 : 1 - 2)

16. தொன்றுபடுசிதார் : புறநா. 400 : 10. துவர - முற்ற ; "துவர முடித்த துகளறு முச்சி" (முருகு. 26)

17 - 8. கலிங்கத்திற்குப் பகன்றைமலர் உவமை; "திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ" (புறநா. 390 : 15) ; "நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத், தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட, நீரிற்பிரியாப் பரூஉத்திரி கடுக்கும், பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ" (குறுந். 330 : 1 - 4) ; "பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கங் கடுப்பச் சூடி" (பதிற். 76 : 12 - 3)

20. கிணைப்பறைக்கு முழுமதி உவமை ; "மதியத் தன்னவென் விசியுறு தடாரி", "மாகவிசும்பின் வெண்டிங்கள், மூவைந்தான் முறைமுற்றக், கடனடுவட் கண்டன்னவெ னியம்" (புறநா. 371 : 17, 400 : 1 - 4)

23. "காவிரி புரக்கு நாடுகிழ வோனே" (பொருந. 248) ; " காவிரி புரக்கு நாடு கிழவோற்கு" (சிலப். 27 : 171)

(393)