223
பலர்க்குநிழ லாகி யுலகமீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுக லாகியக் கண்ணும்
இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ
5டின்னுயிர் விரும்புங் கிழமைத்
தொன்னட் புடையார் தம்முழைச் செலினே.

(பி - ம்.) 1 ‘மீக்கூறத்’

திணையும் துறையும் அவை.

கல்லாகியும் இடங்கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.

(இ - ள்.) பலர்க்கும் அருளுடைமையான் நிழலையொத்து உலகத்தார் மிகுத்துச் சொல்ல 1உலகத்தையாளுந்தன்மை முடியச்செலுத்துதற்கு மறுமையை நினைத்தால் முடிவுபோகாமையின் வடக்கிருத்தற்கு வரைந்த சிறிய இடத்தின்கண் இருந்து உயிர்நீத்தலின் நிலைபெற நடப்பட்ட கல்லான இடத்தும் இடங்கொடுத்தளிப்பர் நிச்சயமாக; உடம்போடு இனியவுயிர் விரும்பு மாறுபோல விரும்பும் உரிமையையுடைய பழையதாகிய நட்பையுடையோர் தம்மிடத்தே செல்லின்-எ - று.

மீக்கூறியென்பது மீக்கூறவெனத் திரிக்கப்பட்டது; ஆணைகூறி யென்றுமாம்.

தொன்னட்புடையோர் தம்முழைச் செலின், இடங்கொடுத்தளிப்ப வெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

அவன் நட்பினை வியந்து கூறியது.


(கு - ரை.) 2. தலைப்போதல் - முடிவுபோதல்.

3. நடுகல் : புறநா. 221 : 13.

(223)


1.“தருமங் கைதர, மன்னுயிர்க் குறுவதே செய்து வைகினேன், என்னுயிர்க் குறுவதுஞ் செய்ய வெண்ணினேன்”(கம்ப. அயோத்தி. மந்திர. 15)