288
மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
அண்ண னல்லே றிரண்டுடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரச மிடைப்புலத் திரங்க
5ஆரமர் மயங்கிய ஞாட்பிற் றெறுவர
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்
தருகுகை.......................................................மன்ற
குருதியொடு துயல்வரு மார்பின்
முயக்கிடை யீயாது மொய்த்தன பருந்தே.

(பி - ம்.) 1 ‘தருகுறை’

திணை - தும்பை; துறை - மூதின்முல்லை.

கழாத்தலையார்.


(கு - ரை.) 1. மண்கொள வரிந்த -கோட்டுமண் கொள்ளுதலால் வரிபட்ட.

2. இரண்டு காளைகள்.

3. வென்றதன் - வென்ற ஏற்றினது. பச்சை- தோல்.

1 - 4. பச்சைபோர்த்த முரசம்: “ஓடாநல்லேற் றுரிவை தைஇய, பாடுகொண் முரசம்” (அகநா.334 : 1 - 2); “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாதுபோர்த்த, மாக்கண் முரச மோவில கறங்க” (மதுரைக்.732 - 3); “ஏற்றுரி போர்த்த விடியுரு முழக்கின்,......முரசு”(மணி.1 : 29 - 31); “ஏற்றுரி போர்த்த வள்வா ரிடிமுரசு”, “புனைமருப்பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற, கனைகுரலுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த, துனைகுரன்முரசம்”(சீவக. 2152, 2899); சாற்றிடக் கொண்ட வேற்றுரிமுரசம்”, “ஏற்றுரி முரசினிறைவன்” (பெருங். 1.38 : 100, 43 : 195); “ஏற்றுரியி னிமிழ் முரசம்” (யா.வி. சூ. 40; ‘தாழிரும்’ என்னுஞ் செய்யுள்)

“ஏற்றுரி முரச நாண” (சீவக.2142) என்னும் பகுதிக்கு இவ்வடிகளை மேற்கோள் காட்டுவர்நச்சினார்க்கினியர்.

5. அமர் - போர். ஞாட்பு - போர்க்களம்.

9. மகளிர் வந்து தழுவுதற்கு இடங்கொடாமற்பருந்துகள் மொய்த்தன.

(288)