143
மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய வுவகையர் சாரற்
5புனத்தினை யயிலு நாட சினப்போர்க்
கைவள் ளீகைக் கடுமான் பேக
யார்கொ லளிய டானே நெருநற்
சுரனுழந்து வருந்திய வொக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசி னிரங்கு மருவி
10நளியிருஞ் சிலம்பிற் சீறூ ராங்கண்
வாயிற் றோன்றி வாழ்த்தி நின்று

நின்னுநின் மலையும் பாடா வின்னா
திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையக நனைப்ப விம்மிக்

15குழலினை வதுபோ லழுதனள் பெரிதே.

(2259, 2261) என்னுஞ் செய்யுட்களும், "மீனாய் வேலையை யுற்றார் சிலர் சிலர் பசுவாய் வழிதொறு மேய்வுற்றார், ஊனார் பறவையின் வடிவுற்றார்சிலர் சிலர்நான் மறையவ ருருவானார், மானார் கண்ணிள மடவா ராயினர் முன்னே தங்குழல் வகிர்வுற்றார், ஆனார் சிலர்சில ரையா நின்சரணென்றார் நின்றவ ரரியென்றார்" (கம்ப.அக்க. 40) என்பதும், "படைமயக் குற்ற போதும் படைமட மொன்றி லாதான்" (சூடாமணி. 9 : 10) என்பதும் ஈண்டறியற்பாலன.

நின்னுநின் மலையும் பாடா வின்னா
திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையக நனைப்ப விம்மிக்

திணை - பெருந்திணை; துறை - குறுங்கலி; தாபதநிலையுமாம்.

அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.

(இ - ள்.) மலையை மழைவந்து சூழ்கவென்று மிக்க பலியைத் தூவி அம்மழை மிகப்பெய்தலான் அப்பெயல் அமைந்து முகில் மேலே போவதாக வேண்டுமெனத் தெய்வத்தைப் போற்றிய குறமாக்கள் மழை இடத்துமாறிய உவகையராய் மலைச்சாரற்கட் புனத்தினையை உண்ணும் நாட! சினத்தினாற் செய்யும்போரையும் கைவண்மையாற் கொடுக்கும் கொடையினையுமுடைய விரைந்த குதிரையையுடைய பேக! அவ்வருளத் தக்காள், யாரோதான்? 1நெருநற்றுச்சுரத்தின்கண்ணே நடந்து வருந்திய எனது சுற்றம் பசித்ததாக, கடிப்பு அறையப்பட்ட முரசு போல ஒலிக்கப்பட்ட அருவியையுடைய பெரிய உயர்ந்த மலைக்கட் சிறிய ஊராகிய அவ்விடத்து வாயிற்கண்ணே வந்து தோன்றி வாழ்த்திநின்று நின்னையும் நின்மலையையும் பாட, அப்பொழுது இன்னாதாகச் சொரியப் பட்ட கண்ணீரை ஒழித்தல்மாட்டாளாய் அக்கண்ணீர் முலையிடத்தை நனைப்பப் பொருமிக் குழல் இரங்கி ஒலிப்பதுபோல் அழுதாள், மிகவும்-எ - று.

மழை வேண்டுங்காலத்துப் பெய்வித்தற்கும் வேண்டாக்காலத்து ஒழித்தற்கும் பலி தூஉய்ப் பேணிய குறவராகிய மாக்களென்க.

குறவர்மாக்கள் : இருபெயரொட்டுப்பண்புத்தொகை.

மாக்கள் புனத்தினை அயிலும் நாட! பேக! என் ஒக்கல் பசித்தென வாயிற்றோன்றி வாழ்த்திநின்று நின்னும் நின்மலையும் பாடக் குழல் இனைவதுபோல அழுதாள்; அவ்வளிக்கத்தக்காள் யார்கொல்? அவள் பால் அருள்பண்ணத்தகுமென வினைமுடிக்க.

இது நின்மலையிற்குறவர்மாக்கள் கடவுட்பேணி மழைவேண்டிய பொழுது பெற்றுத் தாம் வேண்டுமுணவு நுகருமாறுபோல் இவளும் நின் அருள்பெற்று இன்பம் நுகர்வாளாகவேண்டுமென்பதொரு நயந்தோன்ற நின்றது.

மழைமிகப்பெய்தலானென்பது ஆற்றலாற் கூறப்பட்டது.

பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனோடு கூட்டலுறுவார், அருள்பண்ணவேண்டுமென்று இரந்துகொண்டு கூறினமையின், குறுங்கலியாயிற்று.


(கு - ரை.) 1. "குன்றக் குறவ னார்ப்பி னெழிலி, நுண்ப லழிதுளி பொழியு நாட" (ஐங்குறு. 251); "ஏனற் பசுங்கதி ரென்றூழ்க் கழிய வெழிலியுன்னிக், கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா", "இறவரை யும்பர்க் கடவுட் பராய்நின் றெழிலியுன்னிக், குறவரை யார்க்குங் குளிர்வரை நாட" (திருச்சிற். 159, 260)

'என' என்னும் இடைச்சொல் வினைப்பொருண்மைகுறித்து வந்ததற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 10, சே; இ. வி. சூ. 255, உரை.

1-2. "வையக முற்று மாமழை மறந்து வயலி னீரிலை மாநிலந் தருகோம், உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன வொளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும், பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும், செய்கை கண்டுநின் றிருவடி யடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே" (தே. சுந்தர.)

4. கண்மாறல் : குறுந்.125 : 7; கலித். 46 ; 18.

5. புறநா. 168 : 6 - 7.

9. "பறையிசை யருவி" (புறநா.126 ; 8) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. "புணரி, குணில்பாய் முரசி னிரங்குந் துறைவன்" (குறுந். 328)

12. புறநா. 130 ; 3, குறிப்புரை. "மலைவளம் புகழ்ந்தும்" (பெருங். 2, 12: 134)

13. இகுத்தல் - சொரிதல் : மலைபடு.226.

14. "கருங்கால் வெண்குருகு மேயும், பெருங்குள மாயிற்றென் னிடைமுலை நனைந்தே" (குறுந். 325 : 5 - 6)

13 - 4. "அரிமதர் மழைக்கண்ணீ ரலர்முலைமேற் றெறிப்பபோல்" (கலித்.77: 4); "முலைமேல், வடிக்கேழ் மலர்நெடுங்கண் வார்புயலுங்காலும்" (சீவக. 2049)

15. "நெய்த லுண்கண் பைதல் கூரப், பின்னிருங் கூந்தன் மறையினள் பெரிதழிந், துதியன் மண்டிய வொலிதலை ஞாட்பி, னிம்மென் பெருங்களத் தியவ ரூதும், ஆம்பலங் குழலி னேங்கிக், கலங்கஞ ருறுவோள்" (நற்.113); "குழலினு மினைகுவள் பெரிதே" (ஐங்குறு.306); "சிறுகுழல்........இனைதியோ வெம்போல" (கலித்.129 : 16 - 8); "குழலேங்கு மாறேங்கி யழுதார் கோதை மடவாரே" (சீவக.2945); "வேய்ங்குழல் விளிகொ ணல்யாழ் வீணையென் றினைய நாண, வேங்கினள்" (கம்ப.கிட்கிந்தா. அரசியல். 3)

(143)


1 நெருநற்று : "நெருநற்றுச் சென்றாரெங் காதலர்" (குறள்,1278)