153
மழையணி குன்றத்துக் கிழவ னாளும்
இழையணி யானை யிரப்போர்க் கீயும்
சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை
அடுபோ ரானா வாத னோரி
5மாரி வண்கொடை காணிய நன்றும்
சென்றது மன்னெங் கண்ணுளங் கடும்பே
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வானார்த் தொடுத்த கண்ணியுங் கலனும்
யானை யினத்தொடு பெற்றனர் நீங்கிப்
10பசியா ராகன் மாறுகொல் விசிபிணிக்
கூடுகொ ளின்னியங் கறங்க
ஆடலு மொல்லார்தம் பாடலு மறந்தே.

திணை - அது; துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) முகில்சூழ்ந்த மலைக்குத் தலைவன், நாடோறும் பட்டம் முதலாகிய பூண்களையணிந்த யானையை இரப்போர்க்குக் கொடுக்கும் கதிர்விடுகின்ற பசும்பொன்னாற்செய்த அணியினையும் வளைந்த கடக மமைந்த முன்கையினையுமுடைய கொல்லும்போர் அமையாத ஆதன் ஓரியது மழைபோலும் வள்ளிய கொடையைக் காண்டற்கு மிகவும் சென்றது எம்முடைய கூத்தச்சுற்றம்; அச்சுற்றத்தார் குளிர்ந்த நீரின்கட் பூவாத மணி மிடைந்த குவளைப்பூவை1 வெள்ளிநாரால் தொடுக்கப்பட்ட பொன்னரி மாலையினையும் பிற அணிகலங்களையும் யானையணிகளுடனே பெற்றனராய் நீங்கிப் பசியாராகலானேகொல்லோதான், வாரால்வலித்துப் பிணிக்கப்பட்ட பல கருவியும் தொகுதிகொண்ட இனிய இயங்கள் ஒலிப்ப ஆடுதலும் மாட்டாராயினார், தமது பாடுதலையும் மறந்து-எ - று.சூர்ப்புடையதனைச் சூர்ப்பென்றார்

2குடிமை ஆண்மைத்தொடக்கத்தன, நின்றாங்கே நின்று உயர்திணை முடிவும் பெறுதலின் இக்கடும்பென்பதும் பொருணோக்கால் முடிவு பெற்றது.

கண்ணுளங்கடும்பென நின்றவழி, அம்: அல்வழிச்சாரியை. மன்: அசைநிலை.

ஓரி வண்கொடை காணிய கண்ணுளங்கடும்பு சென்றது; சென்ற பின்றை அக்கடும்பாயினோர் தமது 1 பாடலும் மறந்து ஆடலும் ஒல்லாராயினார்: அதற்குக் காரணம் பசியாராகன் மாறுகொலெனக் கூட்டி வினைமுடிவு செய்க. ‘நுண்பூண்' என்று பாடமோதுவாரும் உளர்.


(கு - ரை.) 2. புறநா. 151 : 3 - 4.

3. சூர்ப்பு - வளைவு; ஆகுபெயராற் கடகத்திற்காயிற்று; "சூர்ப்புறு கோல்வளை செறிந்த முன்கை" (அகநா.142 : 17)

5. புறநா.133 : 6 - 7. 7. புறநா.364 : 2 - 3.

8. வால் - வெண்மை; வெள்ளிக்கு ஆகுபெயர்.

8-9. புறநா.148 : 3 - 4.

(153)


1. "வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே" (புறநா. 11 : 17)

2. குடிமை ஆண்மை முதலியவை, "குடிமையாண்மை" (தொல். கிளவி. சூ. 56) என்பதனால் அறியலாகும்.